ஐரோப்பாவின் ஐந்து பெரிய பாதுகாப்பு சக்திகள்... கூட்டாக வான் பாதுகாப்பு அமைப்பை உருவாக்க திட்டம்
ஐரோப்பாவின் ஐந்து பெரிய பாதுகாப்பு சக்திகள் ஒன்றிணைந்து குறைந்த விலையில் வான் பாதுகாப்பு அமைப்புகளை உருவாக்குவதற்கான பல மில்லியன் யூரோ திட்டத்தில் செயல்பட முடிவு செய்துள்ளன.
பாதுகாப்பு அமைச்சர்கள்
போலந்து நகரமான கிராகோவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அமைச்சர்கள் கூட்டத்தில் இந்த திட்டம் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. விலையுயர்ந்த வான் பாதுகாப்பு ஏவுகணைகளுக்கு தன்னியக்க இடைமறிப்பு ட்ரோன்கள் எவ்வாறு பயனுள்ள மாற்றீட்டை வழங்க முடியும் என்பதை உக்ரைன் போர் வெளிக்காட்டியுள்ளது.

மட்டுமின்றி, உக்ரைனின் ஐரோப்பிய நட்பு நாடுகள் அதன் அனுபவத்திலிருந்து கற்றுக்கொள்ளவும் ஆர்வமாக உள்ளன. இந்த நிலையில், இராணுவத்திற்காக அதிகம் செலவிடும் நாடுகளான பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, போலந்து மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் கொண்ட குழு,
ஐரோப்பிய கண்டத்தைப் பாதுகாப்பதில் அமெரிக்காவின் அர்ப்பணிப்பு குறித்த ஐரோப்பிய தலைவர்களின் சந்தேகங்கள் அதிகரித்து வரும் நிலையில், பாதுகாப்புத் திறன்களை அதிகரிக்க ஒருங்கிணைந்து செயல்பட முடிவு செய்துள்ளனர்.
பிரித்தானியாவின் லூக் பொல்லார்ட் தெரிவிக்கையில், இது பல மில்லியன் பவுண்டுகள், பல மில்லியன் யூரோக்கள் மதிப்புள்ள உறுதிமொழி என்றார். இந்த திட்டம் effector ஒன்றை உருவாக்கும் என்று நாங்கள் உண்மையிலேயே நம்புகிறோம், 12 மாதங்களுக்குள் உற்பத்தி செய்யப்படும் என்றார்.
2027 ஆம் ஆண்டுக்குள்
தன்னியக்க தளங்கள் என்பவை சுயாதீனமாக முடிவெடுக்கும் திறன் கொண்ட ஆளில்லா அமைப்புகளாகும். இராணுவ மொழியில் effector என்பது ஒரு விளைவை உருவாக்கும் ஒரு அமைப்பின் கூறுகளாகும்.
இந்த இரண்டையும் LEAP என்றே அடையாளப்படுத்துகிறார்கள். இதன் முதல் திட்டம் 2027 ஆம் ஆண்டுக்குள் வழங்கப்படும் என்று பிரித்தானியா அரசு ஒரு தனி அறிக்கையில் தெரிவித்துள்ளது.

போலந்து பாதுகாப்பு அமைச்சர் Wladyslaw Kosiniak-Kamysz தெரிவிக்கையில், ட்ரோன் அடிப்படையிலான தாக்குதல் திறன்களின் கூட்டு மேம்பாடு, குறைந்த செலவு, கூட்டு உற்பத்தி மற்றும் குறைந்த விலை ட்ரோன் எஃபெக்டர்கள் மற்றும் பேலோடுகளின் கூட்டு கொள்முதல் ஆகியவற்றில் மிக முக்கியமான உறுதிமொழியில் நாங்கள் சமீபத்தில் கையெழுத்திட்டுள்ளோம் என்றார்.
மட்டுமின்றி, இதுதான் நமது காலத்தின் சவால் - தொழில்நுட்பங்கள் மாறிக்கொண்டே இருக்கின்றன... நாம் மிக விரைவாக பதிலளிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |