பிரித்தானியாவை அடுத்து... ட்ரம்பின் ரஷ்ய எண்ணெய் சலுகையை நிராகரித்த ஐரோப்பிய நாடுகள்
ஈரான் போர் தொடர்பில் ஹாமுஸ் நீரிணை மூடப்பட்டுள்ள நிலையில், ட்ரம்ப் அளித்துள்ள 30 நாட்கள் ரஷ்ய எண்ணெய் சலுகையை ஐரோப்பிய நாடுகள் விமர்சித்துள்ளன.
ரஷ்யாவும் ஈரானும்
உக்ரைனுக்கு எதிரான போரின் விவகாரத்தில், சர்வதேச சமூகம் ரஷ்யா மீது தொடர்ந்து அழுத்தத்தை நிலைநிறுத்த வேண்டும் என்றும் ஐரோப்பிய நாடுகள் வலியுறுத்தியுள்ளது.

ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து முடக்கப்பட்டுள்ள நிலையில், எண்ணெய், எரிவாயு உட்பட உலகமெங்கும் தட்டுப்பாடு ஏற்படும் மிக மோசமான சூழல் உருவாகியுள்ளது.
இந்த நிலையிலேயே, இந்தியாவை அடுத்து, உலக நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க 30 நாட்கள் சலுகை வழங்கி ட்ரம்ப் அறிவிப்பு வெளியிட்டார்.
ட்ரம்பின் இந்த முடிவை நேற்று பிரித்தானியா நிராகரித்த நிலையில், தற்போது ஜேர்மனி, பிரான்ஸ், நோர்வே உள்ளிட்ட நாடுகளும் நிராகரித்துள்ளன.
மட்டுமின்றி, ரஷ்யாவும் ஈரானும் உலகப் பொருளாதாரத்தைக் கைப்பற்ற முயல்வதாகக் கூறி, பிரித்தானியாவின் வெளிவிவகாரச் செயலாளர் Yvette Cooper இதனை வன்மையாகக் கண்டித்துள்ளார்.
இதனிடையே, ஈரான் மீதான போரால் உயரும் எண்ணெய் விலையை சமாளிக்க கடலில் தேங்கியுள்ள ரஷ்ய எண்ணெயின் மீதான தடைகளைத் தற்காலிகமாக விலக்கிக்கொள்ள அமெரிக்கா எடுத்துள்ள நடவடிக்கையை ஜேர்மன் சேன்ஸலரான பிரெட்ரிக் மெர்ஸ் தவறான நகர்வு என்றும் விமர்சித்துள்ளார்.

மெர்ஸ் தெரிவிக்கையில், ரஷ்யா எண்ணெய் மீதான தடைகளைத் தளர்த்துவது தவறு என்று நாங்கள் கருதுகிறோம். துரதிர்ஷ்டவசமாக, பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா தொடர்ந்து எந்த விருப்பத்தையும் வெளிப்படுத்தவில்லை. மத்திய கிழக்கில் போர் வெடித்துள்ள நிலையிலும் உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அனுமதிக்கப்போவதில்லை
ட்ரம்பின் இந்த முடிவானது அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய போ விமானங்கள் ஈரான் மற்றும் லெபனானைத் தொடர்ந்து தாக்கி வருவதால், உலகளாவிய எண்ணெய் விநியோகம் ஸ்தம்பித்துள்ள நிலையிலேயே முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஈரானுக்கு ரஷ்யா ரகசியமாக உதவுவதாக ட்ரம்ப் ஒப்புக்கொண்டுள்ளதை அடுத்தே, ரஷ்யாவின் எண்ணெய் வாங்க ட்ரம்பின் சலுகையை ஐரோப்பிய நாடுகள் நிராகரித்துள்ளன.

மேலும், ஈரானின் சக்தி வாய்ந்த ட்ரோன் தாக்குதலை எதிர்கொள்வதில் உதவ உக்ரைன் முன்வந்ததை ட்ரம்ப் அதிரடியாக நிராகரித்த நிலையில், அவரது குழப்பம் நிறைந்த புவிசார் அரசியல் நகர்வுகள் நட்பு நாடுகளை மேலும் திகைப்படையச் செய்திருப்பதாகத் தெரிகிறது.
மட்டுமின்றி, ஹார்முஸ் நீரிணையில் கப்பல்களுக்கு பாதுகாப்பளிக்க அமெரிக்கா மறுத்துள்ளதை அடுத்து சுமார் 1,000 கப்பல்கள் நீரிணையின் இருபக்கமும் காத்திருக்கும் சூழல் உருவாகியுள்ளது.

இந்த நிலையில், அமெரிக்க மற்றும் இஸ்ரேலியத் தாக்குதல்கள் தொடரும் நிலையில், இப்பிராந்தியத்திலிருந்து ஒரு லிற்றர் எண்ணெய் கூட ஏற்றுமதி செய்யப்பட அனுமதிக்கப்போவதில்லை என்று ஈரானிய நிர்வாகம் அறிவித்துள்ளது.
மட்டுமின்றி, ரஷ்யா எண்ணெய் தொடர்பில் இந்தியா உட்பட உலக நாடுகளை மிரட்டி ட்ரம்ப் நிர்வாகம் பணிய வைத்ததன் பின்னர், தற்போது ஈரான் மீதான போருக்கு பின்னர் ரஷ்யா எண்ணெய் வாங்க உலக நாடுகளை அமெரிக்கா கெஞ்சுவதாக ஈரான் கடுமையாக விமர்சித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |