ஐரோப்பா இதில் தலையிடத் தேவையில்லை... ஈரான் - இஸ்ரேல் மோதல் தொடர்பில் ட்ரம்ப் அதிரடி
ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நடந்து வரும் மோதலுக்கு மத்தியில், பதட்டங்களைத் தணிக்க பிரான்ஸ் தலைமையிலான ஐரோப்பிய முன்முயற்சி முன்னெடுக்கப்பட்டது.
என்ன நன்மை
இருப்பினும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்த முயற்சிகளை நிராகரித்ததுடன், ஈரான் அமெரிக்காவுடன் நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும், ஐரோப்பாவுடன் பேச விரும்பவில்லை என்றும் கூறினார்.
மேலும், ஐரோப்பாவுடன் பேசுவதால் என்ன நன்மை என கேள்வி எழுப்பியுள்ள ட்ரம்ப், அமெரிக்காவுடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்துவதே ஈரானுக்கு அதிக நன்மை பயக்கும் என்றும் கூறினார்.
பிரான்சின் இமானுவல் மேக்ரான் தனது ஐரோப்பிய கூட்டாளிகளுடன் சேர்ந்து இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண ஒரு இராஜதந்திர முயற்சியை முன்னெடுத்துள்ளார்.
இருப்பினும், இந்த முன்மொழிவுகள் பற்றிய விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. மேலும், வெளியான தகவல்களின் அடிப்படையில், பிரித்தானியா மற்றும் ஜேர்மனியுடன் பிரான்ஸ் E3 நாடுகளின் குழுவில் ஒரு பகுதியாகும்.
செயலற்ற தன்மை
இந்த ஐரோப்பிய சக்திகள் பல ஆண்டுகளாக ஈரானுடன் அணுசக்தி பேச்சுவார்த்தைகளில் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. மட்டுமின்றி, பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனியைச் சேர்ந்த அமைச்சர்கள் ஜெனீவாவில் ஈரானிய அதிகாரிகளுடன் மூன்று மணி நேர சந்திப்பை நடத்தினர்.
ஆனால், ஜெனீவாவில் நடந்த கூட்டத்தின் போது இஸ்ரேலின் தாக்குதல்களைக் கண்டிப்பதில் பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனியின் செயலற்ற தன்மை குறித்து ஈரானின் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரக்சி கவலைகளை வெளிப்படுத்தியுள்ளார்.
இதனிடையே, அமெரிக்கா இஸ்ரேலை ஆதரித்து ஈரானை தாக்குமா என்பதை முடிவு செய்ய அடுத்த இரண்டு வார கால அவகாசத்தை ஜனாதிபதி ட்ரம்ப் வழங்கியுள்ளார்.
சமாதானத்தை நிலைநாட்டுபவராகச் செயல்படுவதா அல்லது ஈரானை தாக்குவதா என்பது தொடர்பில் தனது அடுத்த நடவடிக்கை குறித்து ட்ரம்ப் கூறுகையில்,
போரைப் பொறுத்தவரை இஸ்ரேல் சிறப்பாகச் செயல்படுகிறது, ஈரான் எதிர்பார்த்த அளவுக்கு செயல்படவில்லை. இதனால் யாரையாவது தடுத்து நிறுத்துவது கொஞ்சம் கடினம் என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |