எங்க தெரு குழந்தைகள் இப்படி தான் பந்து போடும்! இந்தியா வீரரை அசிங்கப்படுத்திய பாகிஸ்தான் முன்னாள் வீரர்
பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான சல்மான் பட், வருண் சக்ரவரத்தியின் பந்துவீச்சை கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று முன் தினம் முதல் டி20 உலகக்கோப்பை தொடருக்கான சூப்பர் 12 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. அதன் படி நேற்று இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின.
இதில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றிலே முதன் முறையாக இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில், இப்போட்டியில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான வருண்சக்ரவர்த்தி 4 ஓவர்கள் வீசி ஒரு விக்கெட் கூட எடுக்காமல் 33 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்தார். இப்போட்டியில் வருண்சக்ரவர்த்தி தன்னுடைய மாயாஜால சுழற்பந்து வீச்சு மூலம் மிரட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அவர் ஏமாற்றத்தையே கொடுத்தார். இந்நிலையில் வருண்சக்ரவரத்தி பந்து வீச்சு குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் அதிரடி வீரரான சல்மன் பட் கூறுகையில், வருண்சக்ரவரத்தி ஒரு மாயஜால சுழற்பந்து வீச்சாளராக இருக்கலாம், ஆனால் எங்களுக்கு ஆச்சரியம் கிடையாது.
ஏனெனில் பாகிஸ்தானில் உள்ள குழந்தைகள் டேப் பால் மூலம் தான் கிரிக்கெட் அதிகம் விளையாடுவார்கள். பாகிஸ்தானில் உள்ள ஒவ்வொரு குழந்தையும் தெரு கிரிக்கெட்டில் இது போன்ற(வருண்சக்வர்த்தி) பந்துவீச்சை விளையாடுகிறார்கள்.
இதனால் இது போன்ற பந்து வீச்சு எங்கள் நாட்டு வீரர்களுக்கு ஒன்றும் புதிது கிடையாது. என்னை பொறுத்தவரை பாகிஸ்தானுக்கு எதிராக மீண்டும் ஒருவேளை இந்தியா விளையாட நேர்ந்தால், அந்த முறை நிச்சயமாக வருண்சக்ரவர்த்தி விளையாடுவார் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை.
அப்படி அதையும் மீறி அவர்கள் விளையாட வைத்தால், முடிவு இப்போது போன்று தான் இருக்கும். வருண் சக்ரவர்த்தியின் பந்து வீச்சை எங்கள் நாட்டு வீரர்களால் எளிதாக கண்டுபிடிக்க முடியும்.
உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால், இலங்கை அணியின் மாயாஜால சுழற்பந்து வீச்சாளர் என்றழைக்கப்பட்ட அஜந்தா மெண்டிஸை, பாகிஸ்தான் வீரர்கள் அற்புதமாக கையாண்டனர். அதன் பின் அவருக்கு பெரிதாக வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.
இது போன்ற பந்து வீச்சாளர்களை பாகிஸ்தான் வீரர்கள் விளையாடியே வளர்ந்துள்ளதால், இது பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களுக்கு எந்த ஒரு தாக்கத்தையும் கொடுக்காது என்று கூறியுள்ளார்.