அமெரிக்கா எங்களை தாக்கினால் இந்தியாவை தாக்குவோம் - பாகிஸ்தான் எச்சரிக்கை
அமெரிக்கா எங்களை தாக்கினால் பதிலடியாக இந்தியாவை தாக்குவோம் என இந்தியாவுக்கான பாகிஸ்தானின் முன்னாள் உயர் ஆணையர் பேசியுள்ளார்.
அமெரிக்காவிற்கு அச்சுறுத்தலாகும் பாகிஸ்தான்
சமீபத்தில், 2026 ஆம் ஆண்டுக்கான வருடாந்திர அச்சுறுத்தல் மதிப்பீட்டை செனட்டில் தாக்கல் செய்த அமெரிக்க தேசிய உளவுத்துறை இயக்குநர் துளசி கபார்ட், பாகிஸ்தானின் நீண்ட தூர பாலிஸ்டிக் ஏவுகணைத் திட்டம் விரைவில் அமெரிக்காவை தாக்கும் திறன் கொண்ட ICBM ஏவுகணைகளை உருவாக்கக்கூடும் என கூறி இருந்தார்.

இதனால் ஈரானின் அணுசக்தி நிலையங்களை அமெரிக்கா தாக்குவது போல், எதிர்காலத்தில் பாகிஸ்தானின் அணுசக்தி நிலையங்களையும் அமெரிக்கா தாக்கலாம் என்ற விவாதம் எழுந்தது.
இந்நிலையில், அமெரிக்கா பாகிஸ்தானை தாக்கினால் பதிலடியாக இந்தியாவை தாக்குவோம் என இந்தியாவுக்கான பாகிஸ்தானின் முன்னாள் உயர் ஆணையர் அப்துல் பாசித்(Abdul Basit) பேசியுள்ளார்.
இந்தியாவை தாக்குவோம்
2014 முதல் 2017 வரை டெல்லியில் உள்ள பாகிஸ்தானின் உயர்மட்ட தூதராகப் பணியாற்றியவர் அப்துல் பாசித்.
இது குறித்து பேசிய அவர், "ஈரானில் நிலைமை மோசமடைந்து, இஸ்ரேல் நம்மை நெருங்கி நிலை கொள்கிறது என்று வைத்துக்கொள்வோம். அமெரிக்காவும் நமது அணுசக்தித் திட்டத்தை எதிர்மறையாகப் பார்க்கும் அல்லது நமது அணுசக்தித் திறனை அழிக்க முயற்சிக்கும் ஒரு சூழல் உருவாகிறது என்றும் வைத்துக்கொள்வோம்.

நான் ஒரு மிக மோசமான சூழ்நிலையைப் பற்றிப் பேசுகிறேன். அது சாத்தியமற்றதுதான். ஏனெனில், பாகிஸ்தானுக்குத் தன்னைத் தற்காத்துக் கொள்ளும் திறன் உள்ளது.
அமெரிக்கா பாகிஸ்தானைத் தாக்கினால், நம்மால் வளைகுடாவில் உள்ள அவர்களின் தளங்களை அடையவோ அல்லது இஸ்ரேலைத் தாக்கவோ முடியாவிட்டால், நமக்கு இருக்கும் ஒரே வழி என்னவாக இருக்கும்? இந்தியா.
எங்களுக்கு வேறு வழியே இருக்காது. எங்கள் தாக்குதல் வரம்பு அந்த இடங்கள் வரை நீட்டிக்கப்படாவிட்டாலும், யாராவது எங்கள் மீது விரோதப் பார்வை செலுத்தினால், நாங்கள் தயக்கமின்றி இந்தியாவைத் தாக்குவோம்.
மும்பை, புது தில்லி மீது தாக்குதல் நடத்துவோம். நாங்கள் பின்வாங்க மாட்டோம். அதன்பிறகு என்ன நடந்தாலும் அது பின்னர் கையாளப்படும், நாம் தயங்கக்கூடாது" என பேசியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |