மனைவி பிள்ளைகள் கண் முன்னே... தாலிபான்களால் படுகொலை செய்யப்பட்ட பிரித்தானிய பயிற்சி பெற்ற வீரர்
பிரித்தானிய சிறப்பு படையினரால் பயிற்சி பெற்ற ஆப்கன் துப்பாக்கி சுடும் வீரர் குடும்பத்தினர் கண் முன்னே படுகொலை செய்யப்பட்டுள்ளது பிரித்தானிய ராணுவ வட்டாரத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
காபூல் நகருக்கு தேடிச் சென்ற தாலிபான்கள் குறித்த வீரரின் சகோதரியின் குடியிருப்பில் தங்கியிருந்த அவரை மூன்று முறை மார்பில் சுட்டு படுகொலை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானிய சிறப்பு வீரர்களால் பயிற்சி அளிக்கப்பட்ட CF333 என்ற குழுவில் உறுப்பினரான நூர் என்ற வீரரையே தாலிபான்கள் தேடிச் சென்று பழி தீர்த்துள்ளனர்.
தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய நிலையில் இந்த குழுவில் பலர் நாட்டைவிட்டு வெளியேறும் பொருட்டு காபூல் விமான நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டிருந்தனர். ஆனால் தாலிபான்களால் தற்போது கொல்லப்பட்ட நூர் நாட்டைவிட்டு வெளியேற முயற்சித்தாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
நூர் தாலிபான்களால் படுகொலை செய்யப்பட்ட தகவல் தற்போது பிரித்தானிய ராணுவத்தினரிடையே அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் படைத்தலைவர் ஆஷ் அலெக்சாண்டர்-கூப்பர் தெரிவிக்கையில்,
இதுவொன்றும் விளையாட்டல்ல. நூர் தாலிபான்களால் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். அவர் செய்த குற்றம் என்ன? பிரித்தானிய துருப்புகளால் வழிகாட்டப்பட்டு, பல வருடம் விசுவாசமாகவும் தொழில்முறை சேவையாற்றிய ஒருவருக்கு நாம் இழைத்த துரோகம் இது என கொந்தளித்துள்ளார்.
நூர் தனது மனைவி மற்றும் 5 இளம் வயது பிள்ளைகளுடன் இருக்கையில் தாலிபான்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். மேற்கத்திய படைகளுடன் வேலை செய்தவர்களை வேட்டையாடி வரும் தலிபான்களின் தொடர் பழிவாங்கும் கொலைகளின் சமீபத்திய கொடுஞ்செயல் இது என கூறப்படுகிறது.