காட்டுத்தீயால் சேதம்: 24 பேர்களுக்கு மரணதண்டனை நிறைவேற்றிய நாடு
சிரியாவில் காட்டுத்தீயை ஏற்படுத்திய விவகாரம் தொடர்பில் கைதானவர்களில் 24 பேர்களுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
குறித்த காட்டுத்தீயால் சிரியா ஜனாதிபதி பஷர் அல் ஆசாதின் மூதாதயர்கள் இல்லம் சேதமடைந்ததாக கூறப்படுகிறது.
ஆனால் காட்டுத்தீயை ஏற்படுத்தி சேதம் விழைவித்ததாக கூறியே பலரை கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் கைதான அனைவர் மீதும் நாட்டின் உள்கட்டமைப்பு, பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் மற்றும் அதனால் மரணத்திற்கு வழிவகுத்த பயங்கரவாத செயல் என சுட்டிக்காட்டி வழக்கு பதியப்பட்டுள்ளது.
மேலும், கைதான 11 பேர்களுக்கு இதே குற்றச்சாட்டில் ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. தொடர்புடைய சம்பவமானது செப்டம்பர் 2020ல் தொடங்கி அக்டோபர் பாதி வரையில் நீடித்தது.
காட்டுத்தீயானது விவசாய நிலங்கள், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள் மற்றும் குடியிருப்புகள், கிராமங்கள், நகரங்கள் என பெருத்த சேதத்தை ஏற்படுத்தியதாக நீதித்துறை அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனாலையே, அவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனை பொருத்தமானது என அவர் விளக்கமளித்துள்ளார். ஆனால், 24 பேர்களுக்கும் மரண தண்டனை எங்கே எப்போது நிறைவேற்றப்பட்டது என்பது தொடர்பான தகவல் ஏதும் வெளியாகவில்லை.
இதனிடையே, காட்டுத்தீயால் பாதிப்படைந்த பகுதிகளுக்கு ஜனாதிபதி ஆசாத் சென்று பார்வையிட்டதுடன், பொதுமக்களுக்கு ஆறுதலும் கூறியுள்ளார்.
குறித்த காட்டுத்தீயால் மில்லியன் கணக்கிலான டொலர் சேதம் ஏற்பட்டுள்ளதுடன், அரசுக்கு சொந்தமான புகையிலை நிறுவனம் ஒன்றும் மொத்தமாக தீக்கிரையானது குறிப்பிடத்தக்கது.