காரை காதலியாக எண்ணி பந்தாடிய யானை... பிள்ளைகளுடன் காருக்குள் சிக்கிய குடும்பத்தின் நிலை?
இனப்பெருக்க காலத்தில் ஆண் யானைகள் எவ்வளவு கொடூரமாக இருக்கும் என்பது பலரும் அறிந்த விடயம்தான்...
ஆனால், உடலில் டெஸ்டோஸ்டீரான் என்னும் ஹார்மோன் எக்கச்சக்கமாக சுரந்து, காதலி ஒருத்தி கிடைக்கமாட்டாளா என தவித்துக்கொண்டிருக்கும் ஆண் யானை ஒன்றிடம் ஒரு கார் சிக்கினால் என்ன ஆவது?
அப்படி ஒரு சம்பவம் தென்னாப்பிரிக்காவில் நடந்துள்ளது...
தென்னாப்பிரிக்காவிலுள்ள iSimangaliso Wetland Park என்னும் வன விலங்குகளுக்கான பாதுகாக்கப்பட்ட பகுதியில் பெண் யானையைத் தேடி அலைந்துகொண்டிருந்த ஆண் யானை ஒன்றிடம் கார் ஒன்று சிக்கியது.
ஒரு ஆண், அவரது மனைவி, 8 மற்றும் 10 வயதுள்ள இரு பிள்ளைகள் என ஒரு குடும்பம் காரில் பயணித்துக்கொண்டிருக்க, யானை ஒன்று காரை வழிமறித்திருக்கிறது.
அந்தக் காரை அது தன் துதிக்கையாலும் தந்தங்களாலும் தள்ளிச் சாய்க்க, அந்தக் காருக்குப் பின்னால் வந்த மற்றொரு காரில் இருந்தவர்கள், ஹாரன் அடித்து அந்த யானையின் கவனத்தைத் திசை திருப்ப முயல்வதை வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில் காணலாம்.
ஆனால், அந்த ஹாரன் சத்தத்தைக் கொஞ்சமும் கண்டுகொள்ளாத அந்த யானை, தன் மொத்த பலத்தையும் காட்டி, அந்தக் காரை உருட்டித் தள்ளி, தலைகீழாக கவிழ்த்த பிறகுதான் அங்கிருந்து நகர்ந்திருக்கிறது.
உயிர் பயத்தில் காருக்குள் உறைந்திருந்த அந்த குடும்பமோ, மீண்டும் தங்களை அந்த யானை திரும்பி வந்து தாக்குமோ என திகிலுடன் இருந்திருக்கிறார்கள்.
அந்த யானை மட்டும் தன் தந்தங்களால் அந்தக் காரைக் குத்தியிருக்குமானால், அந்தக் காருக்குள் இருந்தவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கலாம்.
பின்னர், அந்தக் குடும்பத்தை மீட்புக்குழுவினர் வந்து மீட்டிருக்கிறார்கள்.
அதிர்ஷ்டவசமாக, சிறு கீறல்களுடன் அந்தக் குடும்பத்தினர் தப்பினாலும், அந்தக் கார் முற்றிலும் நாசமாகிவிட்டதாம்.
தங்களுக்கு ஏற்பட்ட பயங்கர அனுபவம் காரணமாக திகிலில் உறைந்திருக்கும் அந்தக் குடும்பத்தினர், இன்னொரு முறை யானைகள் காப்பகம் ஒன்றிற்கு செல்வது சந்தேகம்தான் என்கிறார் மீட்புக்குழுவைச் சேர்ந்த ஒருவர்.