கழுத்தை நெரித்த கடன்! கனவு வீட்டை விற்பதற்கு 2 மணி நேரம் முன் லொட்டரியில் கிடைத்த கோடி பணம்
கேரளாவில் கழுத்தை நெரித்த கடன் தொல்லை காரணமாக பல கனவுகளோடு கட்டிய வீட்டை விற்க முடிவு செய்த நபருக்கு இறுதி நேரத்தில் லொட்டரியில் ரூ.1 கோடி பரிசு விழுந்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மஞ்சேஸ்வரை சேர்ந்தவர் முகமது பாவா (50). இவர் மனைவி அமினா (45). தம்பதிக்கு நான்கு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 8 மாதங்களுக்கு முன்னர் 2000 சதுர அடியில் தனது கனவு வீட்டை முகமது கட்டி குடும்பத்துடன் குடியேறினார்.
அதற்கு முன்னர் தனது இரண்டாவது மகள் திருமணத்துக்காகவும், வீடு கட்டவும் அதிக அளவில் கடன் வாங்கியிருந்தார். வாங்கிய கடனை திருப்பி தரமுடியாமல் அவர் தவித்த நிலையில் கடன் முகமது கழுத்தை நெரித்த காரணத்தால் வாழ்க்கையில் நிம்மதி பறிபோனது.
இதையடுத்து தான் தர வேண்டிய ரூ.45 லட்சம் கடன் தொகைக்காக வீட்டை விற்க முடிவு செய்தார் முகமது. இதற்காக வீட்டு தரகரிடம் பேசி முடித்த நிலையில் கடந்த ஞாயிறு அன்று மாலை 5 மணிக்கு வீட்டை வாங்க நபர் ஒருவர் வருவதாக இருந்தார்.
அன்றைய தினம் மதியம் 1 மணிக்கு வெளியில் சென்ற முகமது கேரள அரசின் லொட்டரி டிக்கெட்கள் 4 வாங்கினார். அடுத்த 2 மணி நேரத்தில் அதாவது 3 மணிக்கு லொட்டரி முடிவுகள் வந்த போது முகமது வாங்கிய ஒரு டிக்கெட்டுக்கு ரூ. 1 கோடி பரிசு விழுந்தது தெரியவந்தது.
இதையடுத்து மகிழ்ச்சியின் உச்சத்திற்கு முகமது மற்றும் குடும்பத்தார் சென்றுள்ளனர். முகமது கூறுகையில், நான்கு மாதங்களாக லொட்டரி சீட்டு வாங்குகிறேன், என்றாவது என் துயரம் முடிவுக்கு வராதா நினைத்திருந்த நேரத்தில் இப்படியொரு அதிர்ஷ்டம் அடித்துள்ளது.
கடன் சுமையால் சில மாதங்களாகவே நிம்மதியில்லாமல் இருந்தோம்.
என் வீட்டை வாங்குவதற்கான முன் பணத்தை கொடுக்க நபர் ஒருவர் வருவதற்கு 2 மணி நேரத்துக்கு முன்னர் இந்த ஆச்சரியம் நடந்துள்ளது.
இனி என் வீடு விற்பனைக்கு இல்லை என மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.