பாலைவனத்தில் ஆறு மணி நேரம்: மத்திய கிழக்கிலிருந்து தப்பிய தந்தை மகளின் திகில் அனுபவம்
பிரித்தானியர் ஒருவரும் அவரது மகளும் சற்று ரிலாக்ஸ் செய்துகொள்ளலாம் என மத்திய கிழக்குக்குச் சென்ற சிறிது நேரத்தில் போர் வெடிக்க, ஆறு மணி நேரம் பாலைவனம் வழியாக பயணித்து பின் பிரித்தானியா திரும்பியுள்ளார்கள்.
மத்திய கிழக்கிலிருந்து தப்பிய தந்தை மகள்
இங்கிலாந்திலுள்ள Southamptonஐச் சேர்ந்தவர் ஜேமி (Jamie Mallon, 54). ஜேமியின் மகளான இஸ்ஸி (Izzy, 27) தாய்லாந்தில் இரண்டரை ஆண்டுகள் பணி முடித்து பிரித்தானியா திரும்ப, தந்தையும் மகளும் சற்று ரிலாக்ஸ் செய்துகொள்ளலாம் என அபுதாபிக்குப் புறப்பட்டுள்ளார்கள்.

தந்தையும் மகளும் அபுதாபியில் கால்வைத்த நேரத்தில், துரதிர்ஷ்டவசமாக ஈரான் வீசிய ஏவுகணைகளும் ட்ரோன்களும் வானில் பறக்க, அவற்றை அமீரகம் தடுத்து அழிக்க, ரிலாக்ஸ் செய்யவந்த ஜேமியும் மகளும் போருக்கு மத்தியில் சிக்கிக்கொண்டார்கள்.
பிரித்தானியாவிலிருக்கும் ஜேமியின் மனைவியும் தாயும் கவலையில் மூழ்க, எப்படியாவது அமீரகத்திலிருந்து வெளியேறி நாடு திரும்ப முடிவு செய்துள்ளார்கள் தந்தையும் மகளும்.
ஈரான் வீசிய ஏவுகணைகளை அமீரகம் தாக்கி அழிப்பதைப் பார்த்துக்கொண்டே ஐந்து நாட்கள் திகிலுடன் கடக்க, கடைசியாக டெக்ஸி ஒன்று கிடைக்க, ஆறு மணி நேரம் பாலைவனம் வழியாக பயணித்து ஓமான் வந்தடைந்துள்ளார்கள் இருவரும்.
அங்கிருந்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் மூலம் பிரித்தானியாவை வந்தடைந்துள்ளார்கள் இருவரும்.
தாய்லாந்தில் ஆய்வாளராக பணிபுரிந்த இஸ்ஸி, அபுதாபி சென்றடைந்த சில நிமிடங்களில் ஏவுகணைகள் மழைபோல் பொழிந்ததையும், அவற்றில் ஒன்று வெடித்ததையும் திகிலுடன் நினைவுகூருகிறார்.
மகளை எப்படி திரும்ப பத்திரமாக பிரித்தானியா கொண்டு சேர்ப்பது என்பதுதான் தன்னுடைய பயமாக இருந்தது என்று கூறும் ஜேமி, அபுதாபியில் தாங்கள் தங்கியிருந்த ஹொட்டல், தங்களை வற்புறுத்தி இலவசமாக உணவும் பானங்களையும் கொடுத்ததை நினைவுகூருவதுடன், அமீரகம் தங்களை மிக நன்றாக கவனித்துக்கொண்டது என்றும், தாங்கள் அதற்கு என்றும் நன்றிக்கடன் பட்டுள்ளதாகவும் நெகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |