எலி விஷம் கலந்த உணவு... தாய்ப்பால் குடித்த பிஞ்சு குழந்தை தாயாருடன் பலி: கணவனின் கொடுஞ்செயல்
பிரேசில் நாட்டில் பெண் ஒருவரும் அவரது மூன்று மாத பிஞ்சு குழந்தையும் கணவன் அளித்த எலி விஷம் கலந்த உணவால் பரிதாபமாக மரணமடைந்துள்ளனர்.
குறித்த விவகாரம் தொடர்பில் 35 வயதான Luiz Edivaldo de Souza என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். பிரேசிலின் Itapema பகுதியிலேயே குறித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
விவாகரத்து கோரிய தமது மனைவி 36 வயதான Josiele Lopes என்பவரின் உணவில் எலி விஷம் கலந்து அளித்துள்ளார் de Souza. அதேவேளை, தமது மூன்று மாத பிஞ்சு குழந்தைக்கும் அவர் பாலூட்டியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், தாயாரும் பிஞ்சு குழந்தையும் ஒரே நேரத்தில் துடி துடித்து இறந்துள்ளனர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15ம் திகதி திடீரென்று Lopes மற்றும் அவரது பிஞ்சு குழந்தை ஆகிய இருவரும் மாயமானதாக புகார் அளிக்கப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பில் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், செப்டம்பர் 23ம் திகதி இருவரது சடலத்தையும் பொலிசார் மீட்டுள்ளனர்.
இந்த வேளையில், de Souza தமது மனைவியின் மொபைலில் இருந்து உறவினர்களின் குறுந்தகவல்களுக்கு பதிலளித்தும் வந்துள்ளார்.
தாயாரை காணவில்லை என Lopes-ன் 17 வயது மகன் அளித்த புகாரின் அடிப்படையிலேயே பொலிசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையின் முடிவில், விவாகரத்து கோரிய தமது மனைவியின் உணவில் de Souza விஷம் கலந்து அளித்ததும், அவர் மருத்துவமனைக்கு கூட்டிச்செல்ல கெஞ்சிய நிலையில், 73 மைல்கள் தொலைவில் உள்ள காட்டுப்பகுதிக்கு கூட்டிச்சென்றுள்ளார்.
இந்த நேரம் தாயாரும் குழந்தையும் காரில் இருந்தே மரணமடைந்துள்ளனர். பின்னர் அங்கேயே இருவரது சடலங்களையும் புதைத்துள்ளார் de Souza.
இந்த வழக்கின் விசாரணை அடுத்த வார இறுதியில் நீதிமன்றத்தில் துவங்க உள்ளது.