மீண்டும் பேஸ்புக் காதல்! நாட்டை விட்டு வெளியேற இலங்கை பெண்ணுக்கு நோட்டீஸ்
இலங்கையிலிருந்து சுற்றுலா விசா பெற்று ஆந்திர பிரதேசத்தில் உள்ள காதலனை காண வந்த பெண்ணை நாட்டை விட்டு வெளியேறுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
தொடரும் எல்லை தாண்டிய காதல்
ஆந்திர பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள வி.கோட்டா அடுத்த அரிமகுலப்பள்ளியை சேர்ந்த லட்சுமணன் கட்டட மேஸ்திரி வேலை செய்து வருகிறார்.
இவர் மீது பேஸ்புக் மூலம் இலங்கையைச் சேர்ந்த விக்னேஸ்வரிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது, இது நாளடைவில் காதலாக மாற 6 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
இதனையடுத்து, விக்னேஸ்வரி லக்சுமணனை திருமணம் செய்ய முடிவு எடுத்தார். பின்னர், அவர் இலங்கையிலிருந்து சுற்றுலா விசா எடுத்து சென்னை விமான நிலையத்திற்கு வந்துள்ளார். அங்கு, அவரை லட்சுமணன் வரவேற்றுள்ளார்.
கோவிலில் திருமணம்
பின்பு, தனது வீட்டிற்கு அழைத்து சென்று விக்னேஸ்வரியை அறிமுகம் செய்து வைத்துள்ளார். லட்சுமணன் வீட்டில் உள்ளவர்களும் இவர்களின் காதலை ஏற்று திருமணம் செய்ய முடிவெடுத்தனர்.
இதனையடுத்து, ஊரில் உள்ள பெரியவர்கள் முன்னிலையில் இவர்களுக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்பு சாய் பாபா கோவிலில் திருமணம் நடைபெற்றது.
இலங்கை பெண்ணுக்கு நோட்டீஸ்
இந்நிலையில், இலங்கை பெண்ணான விக்னேஸ்வரிக்கு சுற்றுலா விசா ஆகஸ்ட் 08 ஆம் திகதியுடன் முடிவடையும் நிலையில் நாட்டை விட்டு வெளியேறுமாறு பொலிசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
மேலும், பெண்ணின் திருமணத்தை இலங்கையில் உள்ள அவரின் பெற்றோருக்கு தெரியப்படுத்துமாறு பொலிசார் கூறினர். எல்லை தாண்டும் காதலில் தற்போது இந்த ஜோடியும் சேர்ந்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |