மத்திய கிழக்கு போர் சூழல்... 21 நாடுகள் தொடர்பில் பயண எச்சரிக்கை விடுத்த பிரித்தானியா
மத்திய கிழக்கு நாடுகள் தொடர்ந்து ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதலால் பாதிக்கப்பட்டு வருவதால், அப்பகுதிக்கான பயணம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
பயண ஆலோசனை
சில நாடுகள் அனைத்து வகையானப் பயணங்களையும் நிறுத்தியுள்ளதாலும், மற்ற நாடுகள் மிகவும் குறைந்த அணுகலை அனுமதிப்பதாலும், பிராந்தியம் முழுவதும் பதட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் பிரித்தானியாவின் வெளிவிவகார அலுவலகம் வன்முறை சம்பவங்களால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு பயண ஆலோசனை மற்றும் எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளது.
தற்போது மத்திய கிழக்கில் ஏழு நாடுகளில் சிக்கியுள்ள பிரித்தானியர்கள் வெளிவிவகார அலுவலகத்தில் தங்கள் இருப்பைப் பதிவு செய்யுமாறும் ஊக்குவிக்கப்பட்டுள்ளது.
பஹ்ரைன், இஸ்ரேல், குவைத், லெபனான், பாலஸ்தீனம், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் உள்ள பிரித்தானியர்கள் FCDO இலிருந்து நேரடித் தகவல்களைப் பெற தங்கள் இருப்பைப் பதிவு செய்ய கோரப்பட்டுள்ளனர்.
சனிக்கிழமை காலை அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது பெரிய அளவிலான தாக்குதலைத் தொடங்கியதன் பின்னர், 140,000 க்கும் மேற்பட்ட பிரித்தானியர்கள் ஏற்கனவே தங்கள் இருப்பை FCDO அலுவலகத்திடம் பதிவு செய்துள்ளனர்.
தற்போது வெளியிடப்பட்டுள்ள 21 நாடுகளின் பட்டியலில், ஆப்கானிஸ்தானிற்கு எந்த வகையான பயணங்களையும் முன்னெடுக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், ஆப்கானிஸ்தான் முழுவதும் பயணம் செய்வது மிகவும் ஆபத்தானது, பல எல்லைக் கடவைகள் தற்போது மூடப்பட்ட நிலையில் உள்ளது. மட்டுமின்றி, நீங்கள் ஒரு பிரித்தானியராக இருந்து ஆப்கானிஸ்தானில் கைது செய்யப்பட்டிருந்தால், உங்களுக்கு மாதங்கள் அல்லது ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

ஆர்மீனியாவின் சில பகுதிகளில் பயணக் கட்டுப்பாடுகள் அமுலில் உள்ளன. அஜர்பைஜான்-ஆர்மீனியா எல்லைக்கு எந்தப் பயணமும் வேண்டாம் என்றும் FCDO அறிவுறுத்துகிறது.
சிரியா, இஸ்ரேல், ஈராக்கிலும்
மத்திய கிழக்கில் நடந்து வரும் போரின் விளைவாக, பஹ்ரைனுக்கு அத்தியாவசிய பயணங்களைத் தவிர மற்ற அனைத்தும் தவிர்க்கப்பட வேண்டும். எகிப்தின் பல பகுதிகள் பாதுக்காப்பானவை என குறிப்பிட்டுள்ள FCDO,
எகிப்து-லிபியா எல்லை, வடக்கு சினாய், தெற்கு சினாய் வடக்குப் பகுதி, இஸ்மாயிலியா கவர்னரேட்டின் கிழக்குப் பகுதி, மேற்கு பாலைவனம் மற்றும் ஹலாயிப் முக்கோணம் மற்றும் பிர் தவில் ட்ரெப்சாய்டு ஆகிய பகுதிகளை தவிர்க்க வேண்டுகோள் விடுத்துள்ளது.
தற்போதைய சூழலில் ஈரானுக்கான அனைத்து பயணங்களும் தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். அத்துடன் சிரியா, இஸ்ரேல் மற்றும் ஈராக்கிலும் பிரித்தானியர்கள் பயணப்பட வேண்டாம் என வலியுறுத்தியுள்ளனர்.

ஜோர்டான் மற்றும் குவைத் நாடுகளுக்கு அத்தியாவசிய பயணங்களைத் தவிர மற்ற அனைத்தும் தவிர்க்கப்பட வேண்டும் என FCDO வலியுறுத்தியுள்ளது.
பெய்ரூட் மற்றும் மவுண்ட் லெபனான் கவர்னரேட்டில் உள்ள சில பகுதிகள் தவிர்க்கப்பட வேண்டும், அதே போல் லெபனானில் உள்ள பல பகுதிகளும் தவிர்க்கப்பட வேண்டும் என FCDO அறிவுறுத்தியுள்ளது.
தற்போது, ஓமானுக்கு எந்த பயண எச்சரிக்கைகளும் விடுக்கப்படவில்லை. பாகிஸ்தானுக்கு அத்தியாவசிய பயணங்களைத் தவிர மற்ற அனைத்தும் தவிர்க்கப்பட வேண்டும் என FCDO அறிவுறுத்தியுள்ளது.
பாலஸ்தீனத்திற்கு பயணத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. கத்தாருக்கு அத்தியாவசிய பயணங்களைத் தவிர மற்ற அனைத்தும் தவிர்க்கப்பட வேண்டும் எனவும், சவுதி அரேபியா-ஏமன் எல்லையைச் சுற்றியுள்ள பகுதிகளுக்குச் செல்லக்கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் அத்தியாவசிய பயணங்களைத் தவிர மற்ற அனைத்தும் தவிர்க்கப்பட வேண்டும் எனவும், கணிக்க முடியாத பாதுகாப்பு நிலைமைகள் காரணமாக ஏமனுக்கு அனைத்து பயணங்களும் தவிர்க்கப்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |