கொரோனாவுக்கு பயந்து.. குளிரூட்டப்பட்ட ட்ரக்கில் ஒளிந்து கொண்ட 7 வயது சிறுவன்! பின்னர் நடந்தது என்ன?
வியட்நாமில் கொரோனாவுக்கு பயந்து குளிரூட்டும் ட்ரக்கில் 7 வயது சிறுவன் உட்பட 15 பேர் பயணித்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வியட்நாம் நாட்டில் கொரோனா மூன்றாவது அலையை அடுத்து நான்காவது அலை பயங்கர மோசமாக பரவியுள்ளது. குறிப்பாக வியட்நாமின் தென் பகுதியில் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகின்றது.
இதனால் அந்த நாட்டில் கொரோனாவை கட்டுக்குள் வைக்க பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் அத்தியாவசிய பொருள்களை கொண்டு வரும் வாகனங்கள் தவிர மற்ற உள்நாட்டு போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து துவான் மாகாணத்தில் காவல் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது ஒரு குளிரூட்டப்பட்ட வாகனத்தில் 7 வயது சிறுவன் உட்பட 15 பேர் ஒளிந்திருப்பதை கண்டுபிடித்தனர்.
இது குறித்து சம்மந்தப்பட்டவர்களிடம் பொலிஸ் விசாரணை நடத்தினர். அதில், கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதாலும், இதனால் தங்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. இதனால் வடபகுதிக்கு செல்ல திட்டமிட்டு இந்த அபாயகரமான முயற்சியில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.
காவலர்கள் ட்ரக்கின் கதவுகளை திறக்கும் பொழுது அனைவரும் குளிரில் நடுங்கி கொண்டும் மூச்சு விட முடியாமல் கஷ்ட்டப்பட்டு கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. வியட்நாமில் இதுவரை 35,000 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.