பிரித்தானிய பெண்ணை கொள்ளையர்கள் கொன்றதற்கான காரணம் இதுதான்: பொலிசார் வெளியிட்டுள்ள புதிய தகவல்
கிரீஸ் நாட்டில் வாழும் பிரித்தானிய பெண் ஒருவரை அவரது கணவரின் கண் முன்னே கொள்ளைக் கும்பல் கழுத்தை நெறித்துக் கொன்ற சம்பவத்தில், அவரை அந்த கும்பல் கொன்றதற்கான காரணத்தை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.
பாபிஸ் (Babis) என்னும் Charalambos Anagnostopoulos (33), ஏதென்சிலுள்ள தங்கள் வீட்டில் தன் மனைவி கரோலின் (Caroline Crouch, 20) மற்றும் தனது 11 மாத பெண் குழந்தையுடன் தூங்கிக்கொண்டிருந்திருக்கிறார்.
அப்போது, முகமூடி அணிந்த சிலர் துப்பாக்கிகளுடன் வீட்டுக்குள் நுழைந்துள்ளார்கள். பாபிஸை அவர்கள் கயிற்றால் கட்டி தரையில் வீசிவிட்டு, கரோலினை கட்டிலுடன் இணைத்துக் கட்டிவைத்துவிட்டு, எங்கே பணத்தை வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டு கரோலினை மிரட்டியிருக்கிறார்கள். தன் அன்பிற்குரியவர்களுக்கு எதுவும் நடக்கக்கூடாது என்று பயந்த பாபிஸ், தான் பணம் வைத்திருந்த பெட்டி எங்கே இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.
அந்த பணத்தை எடுத்துக்கொண்ட கொள்ளையர்கள், மேலும் பணமும் நகையும் வேண்டும் என்று கூறி, அவர்களது 11 மாதக் குழந்தையின் நெற்றிப்பொட்டில் துப்பாக்கியை வைத்து மிரட்டி, வீட்டில் வேறு எங்கே பணமும் நகைகளும் இருக்கின்றது என்று கேட்க, கரோலின் சத்தமிட்டிருக்கிறார்.
பாபிஸும் பணத்தை எடுத்துக்கொண்டு எங்களை விட்டு விடுங்கள், என் மனைவியையும் குழந்தையையும் எதுவும் செய்யாதீர்கள் என்று கதறியிருக்கிறார். ஆனால், சிறிது நேரத்தில் திடீரென கரோலின் அமைதியாகிவிட்டிருக்கிறார். கொள்ளையர்கள் உடனே வீட்டை விட்டு வெளியேறியிருக்கிறார்கள்.
நடந்தது என்னவென்றால், கரோலினை ஒருவன் கழுத்தை நெறித்துக் கொன்றிருக்கிறான். அவர் இறந்தவுடன், கிடைத்த பணத்தை எடுத்துக்கொண்டு அமைதியாக வெளியேறியிருக்கிறார்கள் கொள்ளையர்கள்.
கிரீஸில் இப்படிப்பட்ட சம்பவங்கள் அபூர்வம் என்பதால், இந்த கொலை மற்றும் கொள்ளைச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த கொடூர சம்பவத்தை அரங்கேற்றியது அல்பேனிய கும்பல் ஒன்று என பொலிசார் கருதுகிறார்கள்.
மேலும், கரோலினை கொள்ளையன் ஒருவன் சித்திரவதை செய்யும்போது, அவனது முகமூடி விலகிவிட்டிருக்கிறது. அதை பாபிஸ் பார்த்திருக்கிறார். கரோலினும் அந்த கொள்ளையனுடைய முகத்தைப் பார்த்துவிட்டதாலேயே, அவன் அவரைக் கொலை செய்திருக்கலாம் என பொலிசார் கருதுகிறார்கள்.
காரணம், பாபிஸ் அவன் முகத்தைப் பார்த்திருக்கிறார், ஆனால், பாபிஸ் தன் முகத்தைப் பார்த்துவிட்டது அந்த கொள்ளையனுக்குத் தெரியாது. கரோலின் தன் முகத்தைப் பார்த்தது தெரிந்ததும், அவரை உயிருடன் விட்டால், தன்னைக் காட்டிக்கொடுத்துவிடுவார் என பயந்தே கொள்ளையன் கரோலினைக் கொலை செய்திருக்கலாம் என பொலிசார் கருதுகிறார்கள்.