மூன்று புலம்பெயர்ந்தோர் தண்ணீரில் மூழ்கி மாயம்: பிரித்தானியாவுக்குள் நுழைய முயன்றபோது நிகழ்ந்த துயர சம்பவம்
மிகச் சிறிய படகு ஒன்றின் மூலம் ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழைய முயன்ற மூன்று பேர் வரை தண்ணீரில் மூழ்கியிருக்கலாம் என்ற துயர செய்தி ஒன்று கிடைத்துள்ளது.
நேற்று இரவு, எசெக்ஸ் பகுதியில் Harwich என்ற இடத்தின் அருகிலுள்ள கடல் பகுதியில், மூழ்கிக்கொண்டிருந்த படகு ஒன்றிலிருந்து இரண்டு புலம்பெயர்ந்தோரை அதிகாரிகள் மீட்டுள்ளதாகவும், ஆனாலும் மேலும் மூன்று பேர் வரை தண்ணீரில் மூழ்கியிருக்கலாம் என்ற அச்சத்தின்பேரில் இன்று காலை மீண்டும் தேடுதல் பணி துவக்கப்பட்டுள்ளதாகவும் கடலோர பாதுகாப்புப் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
தேடுதல் பணியில் ஹெலிகொப்டர் ஒன்றும் விமானம் ஒன்றும் ஈடுபட்டுள்ளன. தண்ணீரில் விழுந்து மாயமானவர்கள், சோமாலி நாட்டவர்கள் என்றும், அவர்கள் சென்ற வார இறுதியில் பிரான்சிலிருந்து ஆங்கிலக் கால்வாய் வழியாக பிரித்தானியா நோக்கி புறப்பட்டிருப்பார்கள் என்றும் கருதப்படுகிறது.
இதற்கிடையில், இந்த துயர சம்பவம் நடந்துள்ள இடம் வழியாக பொதுவாக புலம்பெயர்வோர் பயணிப்பதில்லை என்றும், அப்படி அவ்வழியாக பயணிக்க முயன்றவர்கள் இதற்கு முன் உயிரிழந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.


