உக்ரைன் கோடீஸ்வரர் வீட்டில் குண்டு வைத்த பெண்: வழக்கில் அதிரடி திருப்பம்
மொனாக்கோ நாட்டில் வாழ்ந்துவரும் உக்ரைன் நாட்டவரான கோடீஸ்வரர் ஒருவர் வீட்டில் மர்ம நபர் ஒருவர் பார்சல் வெடிகுண்டு மூலம் தாக்குதல் நிகழ்த்திய சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
உக்ரைன் கோடீஸ்வரர் வீட்டில் குண்டு வைத்த பெண்

கடந்த திங்கட்கிழமையன்று, மொனாக்கோ நாட்டில் வாழ்ந்துவரும் வாடிம் (Vadim Ermolaev, 58) என்னும் உக்ரைன் நாட்டவரான கோடீஸ்வரர் வீட்டில் மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு ஒன்றை வெடிக்கச் செய்தார்.

குண்டு வெடித்ததில் வாடிம், அவரது காதலியான அன்னா (Anna Nasobina, 46) மற்றும் வாடிமின் மகனான 13 வயது சிறுவன் ஆகியோர் காயமடைந்தனர்.
வாடிம் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கையில், அன்னாவின் கால்கள் அகற்றப்பட்டு அவரும் உயிருக்குப் போராடிக்கொண்டிருப்பதாகவும், வாடிமுடைய மகனுடைய நிலைமை மற்றவர்கள் அளவுக்கு மோசமாக இல்லையென்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

வழக்கில் அதிரடி திருப்பம்
பின்னர், குண்டு வைத்த மர்ம நபர் ஒரு பெண் என்பதும், அவர் ஆண் வேடமிட்டு வாடிம் வீட்டில் குண்டு வைத்ததும், அவரது பெயர் அனஸ்டேஷியா (Anastasiia Berezovska, 39) என்பதும் தெரியவந்தது.

வெடிகுண்டு வைத்த அனஸ்டேஷியா, பிரான்சுக்குத் தப்பிச் சென்ற நிலையில், அவர் இத்தாலி வழியாக பால்கன் நாடுகளில் ஒன்றிற்குச் சென்றிருக்கலாம் என கருதப்பட்டது.

இந்நிலையில், வழக்கில் அதிரடி திருப்பமாக, அனஸ்டேஷியா உக்ரைனில் உயிரற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
உக்ரைன் தலைநகர் கீவ்வில், நேற்று இரவு 11.00 மணியளவில், சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் அனஸ்டேஷியாவின் உடல் கண்டுபிடிக்கப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |