இன்னும் 72 மணி நேரம் தான்... பிணங்கள் கூட மிஞ்சாது: மாயமான கப்பல் தொடர்பில் வெளியான பகீர் தகவல்
கடற்படை நீர்மூழ்கிக் கப்பலுடன் மாயமான 53 பணியாளர்களை மீட்க இந்தோனேசியாவுக்கு இன்னும் 72 மணிநேரம் மட்டுமே உள்ளது என்ற பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
காணாமல் போன நீர்மூழ்கிக் கப்பலில் எதிர்வரும் சனிக்கிழமை வரை பயன்பாட்டிற்கான ஆக்ஸிஜன் மட்டுமே கையிருப்பு உள்ளதால், நீர்மூழ்கிக் கப்பலைக் கண்டுபிடிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மீட்புக் குழுவினர் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
இந்தோனேசியா கடற்படைக்கு சொந்தமான நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று 53 ஊழியர்களுடன் புதன்கிழமை அதிகாலை பாலி கடற்கரையில் இருந்து 60 மைல் (100 கி.மீ) தொலைவில் காணாமல் போனது.
இதனையடுத்து 6 போர் கப்பலுடன், ஒரு ஹெலிகொப்டர் மற்றும் 400 பேர் கொண்ட மீட்புக் குழுவினர் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் சிங்கப்பூர் மற்றும் மலேசியா நாடுகள் தேடுதல் நடவடிக்கைகளுக்கான கப்பல்களை அனுப்பியுள்ளன, அமெரிக்கா, அவுஸ்திரேலியா, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி நாடுகள் தேவையான உதவிகளை வழங்கியுள்ளன.
ஜேர்மானிய தயாரிப்பான இந்த நீர்மூழ்கிக் கப்பலானது சம்பவத்தன்று பயிற்சியில் ஈடுபட்டிருந்ததாகவும், ஆனால் திடீரென்று கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டதாகவும், அதன் பின்னர் தகவல் ஏதும் இல்லை என கூறப்படுகிறது.
இதனிடையே, ஆழ்கடலுக்குள் செல்ல உத்தரவு கிடைத்த பின்னரே, தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
பயிற்சியின் போது ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டிருந்தால், கண்டிப்பாக மேற்பரப்புக்கு கப்பல் வந்திருக்கும்.
ஆனால் ஏதோ மிக மோசமான சம்பவம் நடந்திருக்கலாம் என்றே கருத வேண்டும் என கடற்படை தரப்பு தெரிவித்துள்ளது.