புடின் பயந்தது நடந்தேவிட்டது... பின்லாந்தும் ஸ்வீடனும் முதல் அடி எடுத்து வைத்தாயிற்று!
புடின் எது நடக்கக்கூடாது என பயந்து உக்ரைன் மீது போர் தொடுத்தாரோ, அது நடந்தே விட்டது.
நேட்டோ அமைப்பு விரிவாக்கம் செய்யப்படக் கூடாது, அதாவது மேலும் பல நாடுகள் நேட்டோ அமைப்பில் இணைந்தால், அதனால் ரஷ்யாவுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று பயந்துதான், உக்ரைனை ஊடுருவினார் புடின்.
ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க திட்டமிட்டிருந்த புடின், உக்ரைனை நேட்டோ அமைப்பில் இணையவிடாமல் தடுப்பதற்காகவும், நேட்டோ அமைப்பில் இணைந்தால் தங்களுக்கும் உக்ரைனுக்கு ஏற்பட்ட கதிதான் ஏற்படும் என்று மற்ற நாடுகள் பயப்படும் என்றும் எண்ணித்தான் உக்ரைன் மீது போர் தொடுத்தார்.
ஆனால், அவர் எதிர்பார்த்ததற்கு மாறாக, உக்ரைன் மீது போர் தொடுத்த புடின், தங்கள் மீது போர் தொடுத்தால் என்ன செய்வது, தங்களுக்கு பாதுகாப்பு வேண்டுமே என்ற கோணத்தில் யோசித்து பின்லாந்தும் ஸ்வீடனும் நேட்டோ அமைப்பில் இணைய முடிவு செய்துவிட்டன.
நேட்டோ அமைப்பில் இணைந்தால் அணு ஆயுதம் வீசிவிடுவேன் என்று கூட மறைமுகமாக மிரட்டல் விடுத்துப் பார்த்தார் புடின்.
ஆனால், புடினுடைய மிரட்டலையும் மீறி, நேட்டோ அமைப்பில் இணைய முடிவு செய்துள்ள பின்லாந்தும் ஸ்வீடனும் தங்கள் முதல் அடியை எடுத்து வைத்துவிட்டன.
ஆம், நேட்டோ அமைப்பில் இணைவதற்காக, இன்று பின்லாந்தும் ஸ்வீடனும் முறைப்படி விண்ணப்பம் செலுத்தியாயிற்று!
ஸ்வீடன் மற்றும் பின்லாந்து நாடுகளின் நேட்டோ அமைப்பிற்கான தூதர்களான Axel Wernhoff மற்றும் Klaus Korhonen ஆகிய இருவரும் பிரஸ்ஸல்ஸ் தலைமையகத்துக்குள் தங்கள் விண்ணப்பக் கடிதங்களுடன் நடந்து செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
அவர்களுடைய விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் பட்சத்தில், பின்லாந்தும் ஸ்வீடனும் உலகின் மிகப்பெரிய இராணுவக் கூட்டமைப்பின் ஒரு பாகமாக ஆகிவிடும்.
அப்போது ரஷ்யா மிரட்டினால், இந்த நாடுகளுக்கு ஆதரவாக ஒரு மில்லியன் இராணுவ வீரர்கள் வந்து நிற்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.