ஆயிரக்கணக்கானோர் போராட்டம்: ஐரோப்பாவில் முதல் நாடாக ஆஸ்திரியா எடுத்த முடிவு
கொரோனா பரவலை எதிர்கொள்ளும் வகையில் ஆஸ்திரியா அரசு, ஐரோப்பாவிலேயே முதல் நாடாக தடுப்பூசியை கட்டாயமாக்கியுள்ளது.
தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், விதிகளை மீறுவோருக்கு மார்ச் மாதத்தில் இருந்து 3,600 யூரோ வரையில் அபராதம் விதிக்கப்படும் எனவும் அரசு சார்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி கட்டாயமாக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியான நவம்பர் மாதத்தில் இருந்தே, ஆயிரக்கணக்கான ஆஸ்திரிய மக்கள் வார இறுதி நாட்களில் தீவிர ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இருப்பினும், ஆஸ்திரிய அரசு தடுப்பூசி கட்டாயம் என்பதை உறுதி செய்து வருகிறது. இதுவரை 72% ஆஸ்திரிய மக்கள் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.
இதனிடையே மக்களின் கோபத்தை தணிக்கும் பொருட்டு தடுப்பூசி போட்டுக்கொள்பவர்கள் அரசு சார்பில் வெளியிடும் லொட்டரியில் வெல்ல வாய்ப்பிருப்பதாக அறிவித்துள்ளது.
500 யூரோ பெருமதியான அந்த கூப்பன்களை வணிக வளாகங்கள், ஹொட்டல், உணவகங்கள், கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு அரங்கங்களில் பயன்படுத்தலாம். இருப்பினும் கட்டாய தடுப்பூசிக்கு எதிரான மக்களின் போராட்டம் வலுத்து வருவதாகவே கூறப்படுகிறது.
14 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய அனைவருக்கும் தடுப்பூசி கட்டயம் என அறிவிக்க அரசாங்கம் முதலில் திட்டமிட்டுள்ளது, ஆனால் தற்போது கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் மருத்துவ காரணங்களுக்காக விலக்கு உள்ளவர்கள் தவிர பெரியவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என அறிவித்துள்ளது.
தடுப்பூசிக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் வலுத்து வந்தாலும், ஆஸ்திரியாவில் இதுவரை கொரோனா தொற்றால் சிகிச்சை பலனின்றி 14,000 பேர்கள் மரணமடைந்துள்ளனர்.
1.5 மில்லியன் மக்கள் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதன்கிழமை மட்டும் 27,600 பேர்களுக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆஸ்திரியா மட்டுமின்றி, ஈக்வடார், தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், இந்தோனேசியா மற்றும் மைக்ரோனேஷியா ஆகிய நாடுகளிலும் கொரோனா தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.