ஐபிஎல் ஏலத்தில் சென்னை அணி தக்க வைக்கும் முதல் வீரர் இவர் தான்! வெளிப்படுத்திய சிஎஸ்கே அதிகாரி
எதிர்வரும் ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கே அணி அதன் முதல் தக்கவைப்பு அட்டையை எந்த வீரருக்கு பயன்படுத்தும் என்பதை சிஎஸ்கே அதிகாரி வெளிப்படுத்தியுள்ளார்.
2021 ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு பின் பேசிய சிஎஸ்கே கேப்டன் தோனியிடம் , சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு என உருவாக்கிய பாரம்பரியத்தை விட்டுச்செல்வது குறித்து நீங்கள் பெருமைப்படுகிறீர்களா என்று நிகழ்ச்சி வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே கேட்டதற்கு, நான் இன்னும் அணியை விட்டுப்போகவில்லையே எனக் கேப்டன் தோனி புன்னகையுடன் பதிலளித்தார்.
தோனியின் பதில் சிஎஸ்கே ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
எனினும், 2022 ஐபிஎல் ஏலத்துக்கான வீரர்கள் தக்கவைப்பு விதியை பிசிசிஐ இன்னும் அறிவிக்கவில்லை.
ஒரு அணி எத்தனை வீரர்களை தக்கவைத்துக்கொள்ள பிசிசிஐ அனுமதியளிக்கும் என்பது பெரிய கேள்வி குறியாக உள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து ANI-க்கு பேட்டியளித்த சிஎஸ்கே அதிகாரி, சென்னை அணியின் கேப்டனை தக்க வைக்க ஏலத்தில் முதல் தக்கவைப்பு அட்டை பயன்படுத்தப்படும்.
கண்டிப்பாக ஏலத்தில் தக்கவைப்பு இருக்கும், அது தான் உண்மை. ஒரு அணி எத்தனை வீரர்களை தக்கவைக்கலாம் என்பது இன்னும் எங்களுக்கு தெரியவில்லை.
ஆனால் உண்மையில், தோனி விஷயத்தில் அது இரண்டாம்பட்சம் தான், ஏனென்றால் முதல் அட்டை அவருக்குப் பயன்படுத்தப்படும்.
அணிக்கு அதன் கேப்டன் தேவை, அவர் அடுத்த ஆண்டு அணிக்கு திரும்புவார் என்று உறுதியாக நம்புவதாக சிஎஸ்கே அதிகாரி கூறியுள்ளார்.