வெள்ளக்காடான ஐரோப்பிய நாடுகள்... எகிறும் மரண எண்ணிக்கை: பலர் மாயம்
ஜேர்மனி, சுவிஸ் உட்பட முக்கிய ஐரோப்பிய நாடுகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், நாளுக்கு நாள் மரண எண்ணிக்கையும் சேதங்களும் அதிகரித்து வருகிறது.
இதுவரை 60 பேர்கள் இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குடியிருப்புகள் பல மொத்தமாக சேதமடைந்துள்ளதுடன், வீதியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் பெருவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
பெரும்பாலான இறப்புகள் ஜேர்மனியில் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பல எண்ணிக்கையிலான மக்கள் மாயமாகியுள்ளனர்.
மக்கள் கூரைகளின் மீதேறி உதவிக்கு காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பெல்ஜியம் மற்றும் சுவிட்சர்லாந்தில் 8 மரணங்கள் பதிவாகியுள்ளது.
ஆனால், ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்கள் அவற்றின் கரைகளை உடைக்கும் அளவுக்கு கனமழையால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, ஜேர்மனியின் Rhineland-Palatinate மாகாண ஆளுநர் Malu Dreyer தெரிவிக்கையில், இதுபோன்ற பேரழிவை மாகாணம் இதுவரை எதிர்கொண்டதில்லை. கன மழையும் பெருவெள்ளவும் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது என்றார்.
பல பகுதிகளில் தொலைபேசியும் இணைய சேவையும் முடங்கியுள்ள நிலையில், மீட்பு நடவடிக்கைகள் தாமதமாவதாக தெரிய வந்துள்ளது.
மிகவும் பாதிக்கப்பட்டுள்ள பகுதியில் ஜேர்மன் ராணுவம் மீட்பு நடவடிக்கையில் களமிறங்கியுள்ளது. இதுவரை 200 பேர் முக்கிய பகுதிகளில் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.