பிரான்சில் தரையிறக்கப்பட்ட விமானம் 276 பேருடன் இந்தியா வந்தடைந்தது
மனித கடத்தல் புகாரின் அடிப்படையில் 303 பயணிகளுடன் பிரான்சில் தடுத்து நிறுத்தப்பட்ட விமானம், இன்று காலை 276 பயணிகளுடன் இந்தியா வந்தடைந்தது.
தடுத்து நிறுத்தப்பட்ட விமானம் புறப்பட அனுமதி
துபாயிலிருந்து மத்திய அமெரிக்க நாடான நிகாரகுவாவுக்கு 303 இந்திய பயணிகளுடன் சென்ற 'ஏ-340’ என்ற விமானம், கடந்த 22 -ம் திகதி திடீரென பிரான்சின் வட்ரி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. அந்த விமானத்தில் இருந்தவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள் என்று கூறப்பட்டது.
முதலில், எரிபொருள் நிரப்புவதற்காக விமானம் தரையிறக்கப்பட்டது என்று கூறப்பட்ட நிலையில், பின்பு மனிதக் கடத்தல் நடைபெறுவதாக கிடைத்த புகாரின் அடிப்படையில் அதிகாரிகளால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும் தகவல்கள் வெளியாகின.
பின்னர், விமான பயணிகள் அனைவரையும் விமான நிலைய வளாகத்தில் உள்ள கட்டடத்தில் தங்க வைக்கப்பட்டனர். அதில் இருந்து இருவரை பிரான்ஸ் நாட்டு பொலிஸ் விசாரணைக்கு அழைத்து சென்றனர். அதன்படி, விமான பயணிகள் அனைவரும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்.
இதனிடையே, விமானத்தில் பயணித்தவர்கள் நிகாரகுவாவுக்கு சென்று அங்கிருந்து சட்டவிரோதமாக அமெரிக்கா, கனடா நாட்டிற்கு செல்லவிருப்பதாக தகவல்கள் வெளியாகின. பின்னர், 303 இந்தியர்களுடன் தடுத்து வைக்கப்பட்ட விமானம் பிரான்சை விட்டு வெளியேறலாம் என அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்தியா வந்தடைந்த விமானம்
ஆனால், விமானத்தில் பயணித்த பயணிகளில் 25 பேர் பிரான்சில் அடைக்கலம் கோரி விண்ணப்பித்துள்ளனர். இதனால், மற்ற பயணிகளுடன் விமானம், நிகாரகுவா நாட்டிற்கு புறப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பிரான்சில் தரையிறக்கப்பட்ட விமானம் இந்தியாவுக்கு செல்லும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, 276 இந்தியர்களுடன் பிரான்சில் இருந்து நேற்று கிளம்பிய விமானம் இன்று காலை மும்பை விமான நிலையம் வந்தடைந்தது. அங்கு, வந்த பயணிகளிடம் அதிகாரிகள் தனித்தனியே விசாரணை நடத்தி வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |