கழிவறையில் கண்ட லட்சக்கணக்கான பணம்..நபரின் செயலால் குவியும் பாராட்டு
அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் கழிவறையில் கண்டெடுத்த பணத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த நபர் பாராட்டுகளை பெற்று வருகிறார்.
கழிப்பறையில் பணம்
அமெரிக்காவின் ஃபுளோரிடாவைச் சேர்ந்த 58 வயதான லூயிஸ் சலாவர், மியாமிக்கு வடக்கே உள்ள Wawa கடையின் கழிப்பறையை பயன்படுத்தியிருக்கிறார்.

அங்கு fanny pack (இடுப்புப் பை) ஒன்றை கண்ட லூயிஸ், அதனை திறந்து பார்த்தபோது ஏராளமான பணம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
மொத்தமாக அந்தப் பையில் 30,000 டொலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.28 லட்சம்) இருந்துள்ளது மற்றும் அவை 50, 100 டொலர்கள் நோட்டுகள் ஆகும்.
பின்னர் உரிமையாளரிடம் அப்பணத்தை கொடுக்க சலாவர் Wawa முழுவதும் தேடியிருக்கிறார். ஆனாலும், அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதற்கிடையில், அந்தப் பணத்திற்கு சொந்தக்காரரான 24 வயது இளைஞர் காவல்துறையை நாடியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து ஒரு பெரும் திருட்டு விசாரணை தொடங்கப்பட்டது. அது காவல்துறையினரை சலாவரிடம் கொண்டு சென்றுள்ளது.
உரியவரிடம் ஒப்படைப்பு
அப்போது தான் உரிமையாளரிடம் பணத்தைத் திருப்பிக் கொடுக்க முயன்றதாக அவர் கூறியிருக்கிறார்.
மேலும், Wawa ஊழியர்களோ அல்லது சட்ட அமலாக்க அதிகாரிகளோ உரிமையாளரிடம் பணத்தை அளிப்பார்கள் என்று தான் நம்பாததால் அவர்களிடம் ஒப்படைக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

காவல்துறை அறிக்கையின்படி, பணப்பை தொலைந்து நான்கு நாட்களுக்குப் பிறகு, அதாவது மே 7ஆம் திகதி அன்று சலாவரை காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர்.
அதன் பின், அவரை காவல்நிலையத்திற்கு வரவழைத்து உரிமையாளரான இளைஞரிடம் அப்பணத்தை திருப்பிக் கொடுக்க ஏற்பாடு செய்தனர்.
அச்சமயம் 'இது உங்களுடையது' என்று சலாவர் கூற, 'நீங்கள் ஒரு உயிர் காப்பாளர்' என்று இளைஞர் பதிலளித்திருக்கிறார்.
இந்நிகழ்வு குறித்து ஊடகத்திற்கு நேர்காணல் அளித்த சலாவர், '30,000 டொலர்கள் என்பது ஒரு பெரிய தொகைதான். ஆனால் அதை நான் வைத்துக்கொள்ள முடியாது. நான் என் பணத்தை நானே சம்பாதிக்க விரும்புகிறேன்' என்று தெரிவித்தார். அவரது இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |