காபூல் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட முதல் சர்வதேச பயணிகள் விமானம்
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க துருப்புகள் வெளியேறிய பின்னர் காபூல் விமான நிலையத்திலிருந்து கட்டார் ஏர்வேஸ் நிறுவனம் முதல்முறையாக பயணிகளை ஏற்றிச் சென்றுள்ளது.
இந்த விமானத்தில் அமெரிக்கர்கள் உள்பட 200 பேர் பயணம் செய்துள்ளனர் என தெரிய வந்துள்ளது. தாலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் காபூல் விமான நிலையம் கொண்டு வந்தபின்னர், கட்டார் அரசின் உதவியுடன் விமானங்களை இயக்கும் பணிகளை தாலிபான்கள் நிர்வாகம் முடுக்கிவிட்டுள்ளது.
உரிய ஆவணங்கள் வைத்திருக்கும் எவரும் நாட்டைவிட்டு செல்லலாம் என்றே தாலிபான்கள் அனுமதி அளித்திருந்தனர். ஆனால் அப்பாவி ஆப்கன் மக்கள் பலருக்கு கடவுச்சீட்டுக்கள் உள்ளிட்ட ஆவணங்கள் ஏதும் இல்லாத நிலையில், ஆப்கானிஸ்தானிலேயே சிக்கிக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க உள்ளிட்ட நேட்டோ துருப்புகள் பின்வாங்கியதை அடுத்து காபூல் விமான நிலையத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த அமெரிக்க ராணுவம் ஆகஸ்ட் 30ம் திகதி இரவு நாடு திரும்பியது.
இதையடுத்து, தாலிபான்களின் கட்டுப்பாட்டிற்குள் காபூல் விமான நிலையம் வந்தது. அதன்பின்னர், கட்டார் அரசின் உதவியுடன் விமானங்களை இயக்கும் பணிகளை தாலிபான்கள் முன்னெடுத்துள்ளனர்.
இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து கட்டாருக்கு முதல் சர்வதேச விமானம் கிளம்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச விமான சேவை தொடங்கப்பட்ட நிலையில், எதிர்வரும் நாட்களில் ஆப்கானிஸ்தானில் சிக்கியிருக்கும் தங்கள் நாட்டு மக்களை சர்வதேச நாடுகள் மீட்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.