உலக நாடுகளுக்கு உணவு ஏற்றுமதியை தடை செய்த மேலும் ஒரு ஆசிய நாடு
உக்ரைன் மீதான ரஷ்ய போரால் உணவு பற்றாக்குறை ஏற்படும் என்ற அச்சம் எழுந்துள்ள நிலையில், ஆசிய நாடான மலேசியா கோழிகளின் ஏற்றுமதியை குறைக்கும் என அறிவித்துள்ளது.
எதிர்வரும் ஜூன் மாதம் தொடங்கி கோழிகளின் ஏற்றுமதியை குறைக்கும் என அறிவித்துள்ளதுடன், உள்நாட்டில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் விளக்கமளித்துள்ளது.
இதனிடையே, ஐக்கிய நாடுகள் மன்றம் அனுமதித்தால் உலகிற்கே உணவளிப்போம் என இந்திய பிரதமர் கூறி வந்த நிலையில், திடீரென்று கோதுமை ஏற்றுமதிக்கு அந்த நாடு தடை விதித்துள்ளாது.
மட்டுமின்றி, இந்தோனேஷியாவும் வெளிநாடுகளுக்கு பாமாயில் விற்பனையைத் தடை செய்துள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பைத் தொடர்ந்து பல தசாப்தங்களுக்கு பின்னர் உலகம் மிக மோசமான உணவு நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.
மலேசியாவில் சமீப மாதங்களில் கோழி மாமிசம் விலை அதிகரித்தே காணப்படுகிறது. அதே வேளை சில சில்லறை விற்பனையாளர்கள் வாடிக்கையாளர்களுக்கு வரம்புகளை வைத்து விற்பனை செய்வதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, உள்நாட்டு விலை மற்றும் உற்பத்தி சீராகும் வரை ஒவ்வொரு மாதமும் 3.6 மில்லியன் கோழி ஏற்றுமதியை நிறுத்த இருப்பதாக மலேசியப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்துள்ளார்.
மட்டுமின்றி, உணவு விவகாரத்தில் சொந்த மக்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மலேசியாவின் இந்த திடீர் முடிவால் அண்டை நாடான சிங்கப்பூர் கடுமையாக பாதிக்கும் என்றே கூறப்படுகிறது.
மலேசியாவின் கோழி ஏற்றுமதி தடையானது உலகளாவிய உணவு நெருக்கடியின் சமீபத்திய காட்சியாகும் என நிபுணர்கள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதனிடையே, உணவுப் பொருட்களின் விலை உயர்வால் கோடிக்கணக்கான மக்களை வறுமை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுக்கு தள்ளும் நிலை ஏற்படும் என்று கடந்த மாதம் உலக வங்கி எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.