உடலுக்கு கேடு விளைவித்து பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் உணவுகள்! இனி இதை தவிர்த்து விடுங்கள்
தற்போதைய காலக்கட்டத்தில் சுவைக்கு மயங்கி ஆரோக்கியம் இல்லாத உணவுகளை பலரும் உண்கிறோம்.
ஆரோக்கியமில்லாத உணவுகள் சாப்பிட்டால் நிச்சயம் உடல்நல குறைபாட்டை ஏற்படுத்தி பல்வேறு நோய்களுக்கு வழிவகுக்கும்.
அதன்படி சில ஆரோக்கியமற்ற உணவுகள் குறித்து காண்போம்
துரித உணவுகள் வேண்டாம்
துரித உணவுகளும் அதிக சுத்திகரிக்கப்பட்ட, பக்குவப்படுத்தப்பட்ட உணவாகவே உள்ளது. அதிக சுத்தப்படுத்தல் அல்லது பதப்படுத்தல் என்பது ரசாயனங்களால் செய்யப்படுகிறது. அதிக சுத்திகரிக்கப்பட்ட மைதா, சர்க்கரை, எண்ணெய் போன்றவற்றில் ஊட்டச்சத்துக்கள் துளியும் இல்லை.
தொடர்ந்து இந்த உணவுகளை உட்கொள்ளும்போது இதய நோய், ஆர்த்ரைடிஸ், அல்சைமர், புற்றுநோய் போன்றவை தாக்கலாம்
பதப்படுத்தப்பட்ட உணவுகளால் உடலுக்கு கேடு
பாக்கெட்டில் அடைக்கப்பட்ட ரெடிமேட் உணவுகள், நொருக்குத்தீனி எல்லாமே உடலுக்கு கெடுதல்தான். நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்க இந்த உணவுகளில் ரசாயனங்கள், உப்பு அதிக அளவில் சேர்க்கப்படுகிறது. அது உடல் நலத்துக்கு நிச்சயம் கேடு விளைவிக்கும்.
ஊறுகாய் மற்றும் அப்பளம்
அப்பளத்தில் அதிக அளவில் உப்பு சேர்க்கப்படுகிறது. எண்ணெய்யில் பொரித்துச் சாப்பிடும்போது கொழுப்பு சேருகிறது. இது உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல பாதிப்புகளுக்கு வழிவகுத்துவிடும். ஊருகாயில் அதிக அளவில் உப்பு உள்ளது. அது ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும், சிறுநீரகத்தை பாதிக்கும்.
எண்ணெய்யில் பொரித்த உணவுகள்
இயற்கை முறையில் பெறப்பட்ட எந்த ஒரு எண்ணையும் ஆரோக்கியமானதுதான். அதைச் சூடுபடுத்தும்போது அதன் தன்மை மாறி உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. மிகவும் நல்லது எனப்படும் ஆலிவ், நல்லெண்ணெய்யாக இருந்தாலும் கூட அதை சூடுபடுத்தும்போது அதன் தன்மை மாறுகிறது.
பழச்சாறு
பழச்சாறு ஆரோக்கியமானது என்று பலரும் நினைத்துக்கொண்டிருக்கின்றனர். பழத்தைக் கடித்துச் சாப்பிடுவதுதான் சிறந்தது. முடியாதவர்கள் மட்டுமே சர்க்கரை சேர்க்காமல் பழச்சாறாக அருந்தலாம்.