காலில் ஏற்பட்ட கொப்பளத்தை சாதாரணமாக எடுத்து கொண்ட இளைஞன்! பரிசோதனையில் காத்திருந்த அதிர்ச்சி... எச்சரிக்கை செய்தி
பிரித்தானியாவில் வெயிலில் விளையாடியதால் காலில் கொப்பளம் ஏற்பட்டதாக சாதாரணமாக எடுத்து கொண்ட நபரை உண்மையில் கொடிய விஷம் கொண்ட சிலந்தி கடித்தது தெரியவந்துள்ளது.
Norfolk-ஐ சேர்ந்தவர் லீவிஸ் ஆல்ப் (31). இவர் கால்பந்து பயிற்சியாளராக உள்ளார். சமீபத்தில் அவர் காலில் கொப்பளம் போல ஒன்று ஏற்பட்டது. வெயிலில் கால்பந்து விளையாடியதால் ஏற்பட்ட கொப்பளம் என அதை சாதாரணமாக எடுத்து கொண்டார்.
பின்னர் அடுத்த சில நாட்களில் அவருக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டதோடு, நடப்பதற்கும் சிரமப்பட்டார். இதோடு லீவிஸ் கடுமையான உடல் வலியாலும் அவதிப்பட்டார், தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுவிட்டதோ என பயந்து பல்வேறு பரிசோதனைகளை செய்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
ஏனெனில் false widow சிலந்தி எனப்படும் கொடிய விஷம் கொண்ட சிலந்தி அவரை கடித்ததாலேயே காலில் பெரியளவில் சீழ் பிடித்து பல்வேறு உடல்நலப்பிரச்சினைகளை ஏற்படுத்தியது தெரியவந்தது.
இதன் காரணமாக உடலில் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை குறைந்து உயிருக்கு ஆபத்தான நிலைக்கே லீவிஸ் சென்றிருக்கிறார். தற்போது பிரச்சினையில் இருந்து மெல்ல மீண்டு வரும் அவர் வருங்காலத்தில் பயிற்சியின் போது சிலந்திகள் கடிக்காமல் இருக்க முழங்கால் உயர சாக்ஸ் அணிய இருப்பதாக கூறுகிறார்.
மேலும் லீவிஸ் கூறுகையில், என்னை விஷம் கொண்ட சிலந்தி கடித்ததை இப்போது நினைத்து பார்த்தாலும் பயமாக உள்ளது. இதனால் என் மனநிலை பாதிக்கப்பட்டது.
இதன் காரணமாக நான் மிகுந்த மனச்சோர்வடைந்தேன் என்று சொல்லமாட்டேன், ஆனால் நான் கற்பனை செய்ததை விட இது என்னை மிகவும் பாதித்தது என கூறியுள்ளார்.