ட்ரம்பிற்கு மறுப்பு... பிரான்ஸ், பிரித்தானியா, ஜேர்மனியுடன் சந்திப்புக்கு தயாராகும் ஈரான்
இஸ்ரேல் - ஈரான் குண்டுவீச்சு நடவடிக்கைகள் தீவிரமடையும் நிலையில், பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி வெளிவிவகார அமைச்சர்கள் ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரக்சியை சந்திக்க திட்டமிட்டுள்ளனர்.
நேரிடையாக சந்திக்க முடிவு
ஏழாவது நாளாக இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் முன்னெடுத்து வருகிறது. பதிலுக்கு ஈரானும் இஸ்ரேல் மீது தாக்குதல் தொடுத்து வருகிறது. இந்த நிலையிலேயே பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி வெளிவிவகார அமைச்சர்கள் ஈரானிய அமைச்சரை நேரிடையாக சந்திக்க முடிவு செய்துள்ளனர்.
இந்த சந்திப்பு வெள்ளிக்கிழமை ஜெனீவாவில் நடைபெற உள்ளது, ஆனால் ஈரானில் இருந்து இறுதி உறுதிப்படுத்தல் இன்னும் நிலுவையில் உள்ளது. சந்திப்பானது உறுதிப்படுத்தப்பட்டால், ஈரானின் இராணுவ மற்றும் அணுசக்தி தளங்கள் மீது இஸ்ரேலின் தாக்குதலைத் தொடங்கியதிலிருந்து இது முதல் நேரடி இராஜதந்திர சந்திப்பாக இருக்கும்.
இந்த வார தொடக்கத்தில் Araghchi மூன்று ஐரோப்பிய வெளிவிவகார அமைச்சர்களுடன் தொலைபேசியில் பேசியுள்ளார். ஆனால் இதுவரை டொனால்ட் ட்ரம்பின் மத்திய கிழக்கிற்கான சிறப்புத் தூதரை சந்திக்க மறுத்துவிட்டார்.
மேலும், ஈரான் முழுவதும் முன்னெடுக்கப்படும் இஸ்ரேலிய தாக்குதல்கள் அமெரிக்காவால் அங்கீகரிக்கப்பட்டவை என்றும் அவர் வாதிட்டுள்ளார். தற்போது ட்ரம்பின் வார்த்தைகளால் அது உறுதி செய்யப்பட்டுள்ளது.
உண்மையில், கடந்த சில ஆண்டுகளாக இஸ்ரேல் முன்னெடுக்கும் தாக்குதல்கள் அனைத்தும் அமெரிக்காவின் ஒப்புதலுடனே நடத்தப்படுகிறது. இஸ்ரேலின் தாக்குதல் நீடிக்கும் வரையில் ட்ரம்பின் மத்திய கிழக்கிற்கான சிறப்புத் தூதரை சந்திக்க வாய்ப்பில்லை என்றே Araghchi தெரிவித்துள்ளார்.
திட்டமிடப்பட்ட ஜெனீவா கூட்டத்திற்கு முன், பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் டேவிட் லாமி, அமெரிக்க வெளிவிவகார செயலாளர் மார்கோ ரூபியோவை வாஷிங்டனில் சந்தித்து, மத்திய கிழக்கின் தற்போதைய நிலைமையை நிவர்த்தி செய்வதில் கவனம் செலுத்தும் விவாதங்களை நடத்துவார்.
ஈரானை சரணடையச்செய்யும்
வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்படும் சந்திப்பில் ஈரான் தனது அணுசக்தி திட்டத்தை எவ்வாறு குறைக்க அல்லது கைவிட தயாராக உள்ளது என்பது குறித்து கவனம் செலுத்தப்படும் என்றே தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள அமைச்சர் Araghchi, ஈரான் தற்காப்பு நடவடிக்கைகளை மட்டுமே முன்னெடுத்து வருவதாகவும், நாங்கள் ஒருபோதும் அணு ஆயுதங்களைத் தேடவில்லை, தேடவும் மாட்டோம் என குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் அமைச்சரை சந்திக்கவிருக்கும் இந்த மூன்று நாடுகளும் ஈரானை சரணடையச்செய்யும் எந்த நகர்வுகளையும் ஆதரிக்கவில்லை என்பதுடன் இஸ்ரேலின் தாக்குதல்களையும் நேரடியாக ஆதரிக்கவில்லை.
மாறாக இஸ்ரேலுக்கு சர்வதேச சட்டத்தின்படி தன்னைப் பாதுகாத்துக் கொள்ள உரிமை உண்டு என கூறியுள்ளது. இந்த மூன்று நாடுகளும் 2015 இல் கையெழுத்திடப்பட்ட ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் சாட்சியாக கையெழுத்திட்டுள்ளன, இது வெளிப்புற கண்காணிப்புக்கு உட்பட்டு, குறைந்த அளவிலான தூய்மையுடன் யுரேனியத்தை செறிவூட்ட ஈரானுக்கு அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |