'வேறு வழியில்லை!' முடிவிலிருந்து பின்வாங்கிய பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி!
65 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி வழங்குவதற்கான தடையை கைவிட பிரான்ஸும் ஜேர்மனியும் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.
பிரித்தானியாவின் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் மற்றும் ஸ்வீடனின் அஸ்ட்ராஜெனேகா இணைந்து தயாரித்த தடுப்பூசியை பிரித்தானியாவில் மில்லியன் கணக்கான மூத்த குடிமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.
ஆனால், பெரியவர்களுக்கு மத்தியில் இந்த தடுப்புசி எந்த அளவிற்கு பலனளிக்கக்கூடியது என்பது அதிகாரப்பூர்வமாக நிரூபிக்கப்படாத நிலையில், அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியை 65-வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பயன்படுத்த ஜேர்மனி , பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகள் தடை விதித்திருந்தது.
ஆனால், பிரித்தானியாவை விட பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி தங்கள் தடுப்பூசி திட்டத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதால், தற்போது தங்கள் முடிவை அவர்கள் மாற்ற திட்டமிட்டுள்ளனர்.
ஜேர்மனியின் தடுப்பூசி குழுவின் தலைவரான Thomas Mertens, மிக விரைவில் அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியை 65 வயதுக்கு மேற்பட்டோர்களுக்கு பயன்படுத்திடுவது குறித்து தனது பரிந்துரையை புதுப்பிப்பதாக தெரிவித்துள்ளார்.
அதேபோல், பிரான்சின் தடுப்பூசி மூலோபாய நோக்குநிலை கவுன்சிலின் தலைவர் Alain Fischer, தனது நாடு அதன் தடுப்பூசி மூலோபாயத்தை "மீண்டும் சரிசெய்யும்" என்று கூறியுள்ளார்.