சிறையிலடைக்கப்பட்ட பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதிக்கு கொலை மிரட்டல்: திகில் சம்பவம்
சிறையிலடைக்கப்பட்டுள்ள பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதிக்கு, முதல் நாளே மற்ற சிறைக்கைதிகள் திகிலை ஏற்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
சிறையிலடைக்கப்பட்ட பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதி
2007ஆம் ஆண்டு முதல், 2012ஆம் ஆண்டு வரை பிரான்ஸ் ஜனாதிபதியாக பதவி வகித்தவர் நிக்கோலஸ் சார்க்கோஸி.
2007ஆம் ஆண்டு, சார்க்கோஸி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டபோது, தேர்தல் பிரச்சார செலவுகளுக்காக லிபியா நாட்டின் சர்வாதிகாரியான முஅம்மர் அல் கடாஃபி, சார்க்கோஸிக்கு பல மில்லியன் யூரோக்கள் பணம் கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டு வழக்கு நடந்துவந்தது.
அந்த வழக்கில், சார்க்கோஸி மீதான சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டு மட்டும் உண்மை என முடிவு செய்த நீதிமன்றம், அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 100,000 யூரோக்கள் அபராதமும் விதித்துள்ளது.
அதைத் தொடர்ந்து, நேற்று , பாரீஸில் அமைந்துள்ள Prison de la Sante என்னும் சிறையில் அடைக்கப்பட்டார் சார்க்கோஸி.
கொலை மிரட்டல் விடுத்த கைதிகள்
சிறையிலடைக்கப்பட்ட முதல் நாளே, சிறையிலிருந்த கைதிகள் சிலர் சார்க்கோஸிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். அவர் சிறையில் அடைக்கப்பட்டது தெரிந்ததும், அவரது அறையின் அருகிலுள்ள அறையிலிருக்கும் சிலர், சார்க்கோ இங்கேதான் இருக்கிறார், இன்றுதான் அவர் சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு இங்கே மோசமான நேரம்தான். அவர் தனியாக இருக்கிறார். எங்களுக்கு எல்லாம் தெரியும். நாங்கள் கடாபிக்காக பழிக்குப் பழி வாங்கப்போகிறோம். வாங்கிய பல பில்லியன் டொலர்களைக் கொடுத்துவிடு என்றெல்லாம் சத்தமிட்டுள்ளனர் சில கைதிகள்.
குள்ள சார்க்கோஸி, தலையைக் காட்டு என்று சத்தமிட்டுள்ளார் ஒருவர். ஆக, சிறை சென்ற முதல் நாளே திகிலுடன்தான் இரவைக் கழித்துள்ளார் சார்க்கோஸி.
சார்க்கோஸிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரது அறைக்கு அருகிலுள்ள அறையில், அவரது பாதுகாப்புக்காக இரண்டு சிறப்பு பாதுகாப்பு அதிகாரிகள் தங்கவைக்கப்பட்டுள்ளார்கள்.
அவர்கள் சார்க்கோஸிக்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு அளிக்க உள்ளதாக பிரான்ஸ் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |