கல்விக் கட்டணத்தை 16 மடங்கு உயர்த்தும் பிரான்ஸ்: வெளிநாட்டு மாணவ மாணவியருக்கு சிக்கல்
பிரான்ஸ், வெளிநாட்டு மாணவ மாணவியருக்கான கல்விக் கட்டணத்தை 16 மடங்கு வரை உயர்த்த முடிவு செய்துள்ளது.
கல்விக் கட்டணத்தை உயர்த்தும் பிரான்ஸ்
2019ஆம் ஆண்டு முதல், வெளிநாட்டு மாணவ மாணவியரின் கட்டணங்கள் குறித்து முடிவு செய்ய பிரான்ஸ் பல்கலைக்கழகங்கள் அனுமதிக்கப்பட்டன.

அதாவது, ஐரோப்பிய ஒன்றிய மற்றும் உள்ளூர் மாணவர்களுக்கான அதே கல்விக் கட்டணத்தை வெளிநாட்டு மாணவர்களுக்கும் வசூலிப்பதா, அல்லது, வெளிநாட்டவர்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதா என்பதை பல்கலைக்கழகங்களே முடிவு செய்துகொள்ளலாம்.
பெரும்பாலான பல்கலைக்கழகங்கள், வெளிநாட்டு மாணவர்களுக்கும் உள்நாட்டு மாணவர்கள் செலுத்தும் அளவிலான கல்விக் கட்டணத்தையே வசூலித்துவந்தன.
ஆனால், இந்த கல்வியாண்டு முதல் பல்கலைக்கழகங்கள் வெளிநாட்டு மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை முடிவு செய்ய முடியாது.
2026 செப்டம்பர் முதல் பிரான்ஸ் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்க விண்ணப்பிக்கும் வெளிநாட்டு மாணவர்கள் புதிய கட்டணத்தை செலுத்தவேண்டியிருக்கும் என பிரான்ஸ் கல்வி அமைச்சரான பிலிப் (Philippe Baptiste) தெரிவித்துள்ளார்.
இதற்கு முன், இளங்கலை பட்டப்படிப்புக்கான கல்விக் கட்டணம் ஆண்டுக்கு 178 யூரோக்களாகவும், முதுகலைப் பட்டப்படிப்புக்கான கட்டணம் ஆண்டுக்கு 254 யூரோக்களாகவும் இருந்தது.
ஆனால், இந்த ஆண்டு முதல், பிரான்ஸ் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்க, இளங்கலை பட்டப்படிப்புக்கு கல்விக் கட்டணம் ஆண்டுக்கு 2,895 யூரோக்களும், முதுகலைப் பட்டப்படிப்புக்கு 3,941 யூரோக்களும் செலுத்தவேண்டும்.

இது, முந்தைய கட்டணத்தை விட, சுமார் 16 மடங்கு அதிகமாகும்.
இப்படி பிரான்ஸ் கல்விக் கட்டணங்களை உயர்த்துவதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், கட்டணங்களை உயர்த்துவதற்கு பிரான்ஸ் அரசு கூறியுள்ள சில காரணங்களைக் கேட்டால் வேடிக்கையாக உள்ளது.
ஆம், குறைவான கட்டணம் வசூலிக்கும் பல்கலைக்கழகங்களை வெளிநாட்டவர்கள் மட்டமாக நினைத்துவிடுவார்களாம். அதிக கட்டணம் வசூலித்தால்தான் அது புகழ்பெற்ற பல்கலையாக இருக்குமோ என வெளிநாட்டவர்கள் எண்ணுவார்களாம்!
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |