பிரான்சில் வேகமாக பரவும் காட்டுத்தீ: தீயில் கருகிய 1100 ஹெக்டேர் காடுகள்: 500 மக்கள் வெளியேற்றம்
பிரான்சில் தீவிரமாக பரவி வரும் காட்டுத்தீ காரணமாக 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
பிரான்சில் காட்டுத்தீ
ஐரோப்பாவின் பெரும்பாலான பகுதிகளை வெப்ப அலைகள் மற்றும் காட்டுத்தீ பாடாய் படுத்தி வரும் நிலையில் பிரான்ஸ் நாட்டின் தென்மேற்கு பகுதியில் பரவிய காட்டுத்தீ மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
இதுவரை கிட்டத்தட்ட 1100 ஹெக்டேர் காடுகள் தீயில் கருகி சாம்பலாகியுள்ளன. இதன் காரணமாக அப்பகுதியை சுற்றியுள்ள 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அவசர அவசரமாக அவர்களது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

காட்டுத்தீ பரவலுக்கான முக்கிய காரணம்
இந்த ஆண்டு கோடைக்காலத்தில் பிரான்ஸில் வெப்ப அலைகளானது வழக்கத்தை விட பல மடங்கு தீவிரத்தன்மை கொண்டதாக இருந்தது.
இதன் காரணமாக காடுகள் வறண்டு மிக எளிதில் தீப்பிடிக்கக் கூடிய இடமாக மாறி போனதே இந்த கட்டுப்படுத்த முடியாத பயங்கர காட்டுத்தீ சம்பவங்களுக்கு காரணமாக கூறப்படுகிறது.
புதிய காட்டுத்தீ சம்பவமானது வியாழக்கிழமை லேண்ட்ஸ் மாகாணத்தில் ஆரம்பித்து பரவ தொடங்கியது.

போராடும் தீயணைப்பு வீரர்கள்
காட்டுத்தீ சம்பவத்தை கட்டுப்படுத்த கிட்டத்தட்ட 500 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக போராடி வருகின்றனர்.
நள்ளிரவில் லாண்டஸ் டி காஸ்கோக்னே என்ற இயற்கை பூங்காவில் அமைந்துள்ள சிறிய கிராமமான லுக்லான் அருகே தீப்பொறிகளானது எழும்பின.
ஆனால் தீயணைப்பு வீரர்கள் இரவு முழுவதும் போராடி கிராமத்திற்குள் நுழைய விடாமல் தடுத்துள்ளனர். இதனால் வீடுகள் எதுவும் சேதமடையவில்லை.
இருப்பினும் அடுத்த 15 மணி நேரம் மிகவும் இக்கட்டான நேரம் என்று தீயணைப்பு துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |