திடீரென ரயிலில் ஏறி பிரித்தானியரை கைது செய்த ஆயுதம் தாங்கிய பிரெஞ்சு பொலிசார்: பரபரப்பை ஏற்படுத்திய ஒரு சம்பவம்
சரியான மாஸ்க் அணியவில்லை என்று கூறி, ரயிலில் பயணித்த பிரித்தானியர் ஒருவரை ஆயுதம் தாங்கிய பிரெஞ்சு பொலிசார் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியர் ஒருவர் பிரான்சிலிருந்து லண்டன் நோக்கிச் செல்லும் ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்தார். அப்போது, வடக்கு பிரான்சிலுள்ள Lille என்ற இடத்தில் திடீரென ரயில் நின்றுள்ளது.
உடனே ஆயுதம் தாங்கிய பொலிசார் எட்டுபேர் திபுதிபுவென ரயிலில் ஏறியுள்ளனர். ரயில் மேலாளரான ஒரு பெண் அந்த பிரித்தானியரை சுட்டிக் காட்ட, பொலிசார் அவரை கைது செய்து ரயிலிலிருந்து வலுக்கட்டாயமாக இறக்கியுள்ளனர்.
நடந்தது என்னவென்றால், ரயில் மேலாளரான அந்த பெண், அந்த பிரித்தானியர் அணிந்திருக்கும் மாஸ்க் சரியானது அல்ல என்று கூறி அவரிடம் தகராறு செய்திருக்கிறார். உடனே மற்றொரு பயணி கொடுத்த மாஸ்கை வாங்கி அணிந்து கொண்டிருக்கிறார் அவர்.
அவ்வளவுதான், பிரச்சினை முடிந்தது என்று சக பயணிகள் எண்ணிக்கொண்டிருக்கும்போது, திடீரென சம்பந்தமில்லாத ஒரு இடத்தில் ரயில் நின்றிருக்கிறது. அதவாது, அந்த பெண் மேலாளர் பொலிசாருக்கு தகவல் கொடுத்திருக்கிறார். அதன்படி ரயிலில் ஏறிய ஆயுதம் தாங்கிய பொலிசார் அந்த பிரித்தானியரை ஒரு குற்றவாளியைப் போல கைது செய்து ரயிலிலிருந்து வலுக்கட்டாயமாக இறக்கிச் சென்றிருக்கிறார்கள்.
சாப்பிடும் நேரம் தவிர, மற்ற நேரங்களில் ரயிலில் மாஸ்க் அணியவேண்டும் என்பது கட்டாயம்தான். ஆனால், அதே பெட்டியில் மாஸ்கைக் கழற்றிக்கொண்டு பலர் சாப்பிட்டுக்கொண்டிருக்க, இந்த பிரித்தானியர் மாஸ்க் அணிந்திருந்த நிலையிலும், அது சரியில்லை என்று கூறி அவரை பிரான்ஸ் பொலிசார் கைது செய்துள்ளனர்.
சக பயணிகள் தேவையில்லாமல் தாமதமாகிறது என முறுமுறுக்க, அந்த பிரித்தானியரை இறக்கி விட்டுவிட்டு ரயில் புறப்பட்டுள்ளது.
அவர் பிரித்தானியர் என்ற காரணத்தினால் மட்டும் இறக்கிவிடப்பட்டாரா, பிரான்சுக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான உரசல் காரணமாக இப்படி பிரித்தானியர்கள் பழிவாங்கப்படுகிறார்களா என்பது தெரியவில்லை.
என்ன நடந்தது, எதற்காக அந்த பிரித்தானியர் கைது செய்யப்பட்டார் என்பதற்கான விளக்கம் ரயில்வே நிர்வாகத்திடம் கேட்கப்பட்டுள்ள நிலையில், இன்று வரை ரயில்வே தரப்பிலிருந்து பதிலேதும் வரவில்லை.