இந்தியாவில் வர உள்ள பறக்கும் பேருந்து - அமைச்சர் நிதின் கட்காரி தகவல்
இந்தியாவில் பறக்கும் பேருந்தை அறிமுகப்படுத்த உள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் வர உள்ள பறக்கும் பேருந்து
இந்தியாவில் மக்கள் தொகை பெருக்கம் அதிகரித்து வரும் அதேவேளையில், அதனால் அதிகரித்துள்ள வாகனப் பயன்பாடு மூலம் போக்குவரத்து நெரிசலும் அதிகரித்து வருகிறது.
போக்குவரத்தை நெரிசல் மற்றும் அதனால் ஏற்பாடு காற்று மாசு உள்ளிட்ட சிக்கல்களை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
லக்னோ-கான்பூர் விரைவுச்சாலைத் தொடக்க விழாவில் பேசிய மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, இந்தியாவில் எதிர்காலத்தில் பறக்கும் பேருந்துகளை அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், "நான் எப்போதுமே நாட்டிற்குப் புதிய தொழில்நுட்பங்களையும், கம்பிவடப் பாதைகளையும், கேபிள் கார்களையும் கொண்டு வந்துள்ளேன். முன்னதாக, தண்ணீரில் தரையிறங்கக்கூடிய ஒரு விமானத்தையும் நான் கொண்டு வந்திருந்தேன்.
இப்போது எனது அடுத்த திட்டம், ஒரு பறக்கும் பேருந்தைக் கொண்டு வருவதாகும். இந்தத் துறை என் அதிகார வரம்பிற்குள் வருவதால், பறக்கும் பேருந்துகளுக்கான மின்சார அதிவேகப் போக்குவரத்து முறையை உருவாக்கப் போகிறேன்.
இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம், பயணிகள் ஒரு மூலையிலிருந்து மற்றொரு மூலைக்கு எப்போது சென்றடைந்தார்கள் என்பது கூட அவர்களுக்குத் தெரியாது. இதை நான் விரைவில் தொடங்குவேன்" என தெரிவித்துள்ளார்.

ஆனால் அந்த திட்டத்திற்கான தொழில்நுட்பம் குறித்தோ, சாத்தியக்கூறுகள் குறித்தோ, காலக்கெடு குறித்தோ எந்தவித கருத்துகளையும் தெரிவிக்கவில்லை.
பறக்கும் பேருந்து என உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள தண்டவாளத்தில் செல்லும் பேருந்துகளை(Sky Bus) அவர் குறிப்பிட்டிருக்கலாம் என கருதுகின்றனர்.
அப்படியான பறக்கும் பேருந்துகள் வரும் பட்சத்தில், பெருநகரங்களில் உள்ள போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறையும். ஆனால், அதற்கான தொழில்நுட்பம், கட்டுமானம் என அதனை தொடங்கி முடிப்பதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |