ஈரானுக்கு ஒருவாரம் அவகாசம் அளித்தோம்... அலி கமேனியின் இறுதிச்சடங்கு தொடர்பில் ட்ரம்ப்
ஈரானின் உயர் தலைவர் அலி கமேனியின் இறுதிச் சடங்குகள் சனிக்கிழமையன்று தெஹ்ரானில் உத்தியோகப்பூர்வமாகத் தொடங்கியுள்ளன.
கடுமையாகத் தாக்கி
பிப்ரவரி 28 அன்று ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் கொல்லப்பட்ட 86 வயதுடைய அலி கமேனிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஆயிரக்கணக்கான ஈரானியர்கள் திரண்டுள்ளனர்.

இந்த நிலையில், மறைந்த உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கான ஆறு நாள் இறுதிச் சடங்குகள் தெஹ்ரானில் தொடங்கிய நிலையில், தாம் ஈரானை மிகக் கடுமையாகத் தாக்கி சின்னாபின்னமாக்கியுள்ளதாக ட்ரம்ப் கூறியுள்ளார்.
அமெரிக்கா-ஈரான் போரின் தொடக்கத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் அலி கமேனி கொல்லப்பட்ட நிலையில், ஏறக்குறைய நான்கு மாதங்களுக்குப் பிறகு இறுதிச்சடங்குகள் முன்னெடுக்கப்படுகிறது.
இந்த நிலையில், அமெரிக்காவின் 250வது சுதந்திர நாள் கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக மவுண்ட் ரஷ்மோர் அருகே ஆற்றிய உரையின்போது, இறுதிச் சடங்கிற்காக ஈரானுக்கு ஒரு வாரம் அவகாசம் வழங்கப்பட்டதாக ட்ரம்ப் கூறியுள்ளார்.
நாம் ஒரே நாளில் வெனிசுலாவை வீழ்த்தினோம்; ஈரானை மிகக் கடுமையாகத் தாக்கி, சின்னாபின்னமாக்கினோம்; தற்போது அவர்கள் ஒரு உடன்பாட்டிற்கு வரத் துடித்துக்கொண்டிருக்கிறார்கள்.
ஈரானியர்கள் எப்படியாவது ஒரு ஒப்பந்தத்திற்கு வரத் துடிக்கிறார்கள். நாம் நல்லவர்கள் என்பதால், இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள அவர்களுக்கு ஒரு வாரம் அவகாசம் அளித்தோம் என்று ட்ரம்ப் கூறியுள்ளார்.
அலி கமேனியின் சவப்பெட்டி, இஸ்லாமியக் குடியரசின் கொடியால் போர்த்தப்பட்டு, அதன் மீது அவரது கருப்புத் தலைப்பாகை வைக்கப்பட்டு, இறுதிச்சடங்குகள் முன்னெடுக்கப்படும் வளாகத்திற்குள் கொண்டு செல்லப்பட்டது.

அவரது 14 மாதப் பேத்தியின் சிறிய சவப்பெட்டி உட்பட, இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதலில் கொல்லப்பட்ட அவரது உறவினர்களின் உடல்களும் அவருக்கு அருகில் வைக்கப்பட்டிருந்தன.
ஈரான் மற்றும் ஈராக் முழுவதும் உள்ள நகரங்களில் ஆறு நாட்களுக்குத் திட்டமிடப்பட்டுள்ள பொது இறுதிச் சடங்குகளுக்காக, கமேனியின் உடல் வெள்ளிக்கிழமை தெஹ்ரானை வந்தடைந்தது.
அவரது உடல் ஈரான் மற்றும் அண்டை நாடான ஈராக்கில் உள்ள பல்வேறு நகரங்கள் வழியாகக் கொண்டு செல்லப்படும். இஸ்லாமியக் குடியரசின் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள், இன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் திறக்கப்படும் தெஹ்ரானின் 'கிராண்ட் மொசல்லா' (Grand Mosalla) வளாகத்திற்கு வெளியே வெள்ளிக்கிழமை மாலையிலேயே காத்திருந்தனர்.
சிவப்பு நிறக் கொடி
அடுத்த மூன்று நாட்களில் தெஹ்ரானில் மட்டும் 15 முதல் 20 மில்லியன் மக்கள் கமேனிக்கான அஞ்சலி நிகழ்வ்வில் பங்கேற்பார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே, இன்று கிராண்ட் மொசல்லா வளாகத்தின் வாயில்கள் திறக்கப்பட்டதும், ஆயிரக்கணக்கான மக்கள் அந்த இடத்திற்குள் நுழைந்தனர், மேலும் அந்தப் பரந்த வளாகத்தின் பிரதான முற்றம் மக்களால் நிரம்பி வழிந்தது.
துக்கம் அனுசரிப்பவர்கள் பழிவாங்கும் கோரிக்கையோடு தொடர்புடைய குறியீடான சிவப்பு நிறக் கொடிகளை ஏந்தியவாறு, அமெரிக்கா அழியட்டும் என்றும் பழிவாங்குவோம், பழிவாங்குவோம் என்றும் முழக்கமிட்டனர்.

வெள்ளிக்கிழமையன்று ஈரானிய உயர்மட்ட அதிகாரிகள் தங்கள் இறுதி மரியாதையை செலுத்தியுள்ளனர்; நாடாளுமன்ற சபாநாயகரும், அமெரிக்கப் பேச்சுவார்த்தைகளின் முக்கியப் பேச்சுவார்த்தையாளருமான முகமது பாகர் காலிபாஃப் வெளிப்படையாகக் கண்ணீர் சிந்தியிருந்தார்.
கமேனியின் உடல் திங்கட்கிழமை வரை தெஹ்ரானில் வைக்கப்பட்டிருக்கும்; அன்று நகரின் வழியாக ஒரு ஊர்வலம் நடைபெறும். இதனையடுத்து, செவ்வாய்க்கிழமையன்று மதக் கல்வி மையமான கோம் (Qom) நகருக்குக் கொண்டு செல்லப்படும்;
பின்னர் புதன்கிழமையன்று அண்டை நாடான ஈராக்கில் உள்ள புனித நகரங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, இறுதியாக வியாழக்கிழமையன்று வடகிழக்கு ஈரானில் உள்ள கமேனியின் சொந்த நகரமான மஷ்ஹாதில் (Mashhad) நல்லடக்கம் செய்யப்படும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |