வெளிநாடொன்றில் மாயமான ஜேர்மன் இளம்பெண்: கிடைத்துள்ள ஆறுதலளிக்கும் செய்தி
அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுலா சென்ற ஜேர்மன் இளம்பெண்ணொருவர் மாயமான விடயம் கவலையை உருவாக்கியிருந்த நிலையில், தற்போது அவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
ஜேர்மன் இளம்பெண் மாயம்
ஜேர்மானியரான கரோலினா Carolina Wilga, 26) என்னும் இளம்பெண், மேற்கு அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுலா சென்றிருந்தார்.
ஜூன் மாதம் 29ஆம் திகதி, கரோலினா Beacon என்னும் நகரிலுள்ள கடை ஒன்றில் கடைசியாக காணப்பட்டுள்ளார். அதற்குப் பின் அவரைக் காணவில்லை.
இந்நிலையில், வியாழக்கிழமை மதியம் Karroun Hill என்னுமிடத்துக்கு அருகில் கரோலினுடைய வேன் கண்டுபிடிக்கப்படவே, அவருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டிருக்கலாம் என்ற அச்சம் உருவானது.
கிடைத்துள்ள ஆறுதலளிக்கும் செய்தி
இந்நிலையில், காணாமல்போய் 12 நாட்களுக்குப் பின் கரோலின் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
நடந்தது என்னவென்றால், வனப்பகுதி ஒன்றில் கரோலின் வேனில் சென்றுகொண்டிருந்த நிலையில், அவரது வாகனத்தில் ஏதோ பிரச்சினை ஏற்பட்டதுடன், சேற்றிலும் சிக்கிக்கொண்டுள்ளது அவரது வேன்.
சூரியன் மறையும் திசை நோக்கி நடந்தால் மக்கள் வாழும் இடத்தை அடைந்துவிடலாம் என்ற நம்பிக்கையில் நடக்கத் துவங்கியுள்ளார் கரோலின். ஆனால், அவர் வழிதப்பி எங்கோ சென்றுவிட்டார்.
சுமார் 12 நாட்கள் அலைந்து திரிந்து உறையவைக்கும் குளிரில் அவதியுற்று கொசுக்கடி தாங்காமல் தவித்த நிலையில், நேற்று மாலை 4.15 மணிக்கு பொதுமக்களில் ஒருவர் கரோலினைக் கண்டுபிடித்துள்ளார்.
பொலிசார் கரோலினை தீவிரமாகத் தேடிவந்த நிலையில், கரோலினுடைய தாயும் அவரைக் கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடியிருந்தார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கரோலினுடைய உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
12 நாட்கள், தன்னந்தனியாக, தன்னிடம் இருந்த உணவை கொஞ்சம் கொஞ்சமாக பயன்படுத்தி, குளிரில் உறைந்து, இனி தன்னைக் காப்பாற்ற யாரும் வரமாட்டார்கள் என்ற முடிவுக்கே அவர் வந்துவிட்டதால், தான் உயிர் பிழைத்ததை அவரால் இன்னமும் நம்பமுடியவில்லையாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |