புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களை நாடுகடத்துவதை வேகப்படுத்தவேண்டும்: ஜேர்மன் அமைச்சர்கள் கோரிக்கை
ஜேர்மனியின் சேன்ஸலராக இருந்த ஏஞ்சலா மெர்க்கல் சிரிய அகதிகளுக்கு நாட்டைத் திறந்துவிட்டபோது நிகழ்ந்த அகதிகள் நெருக்கடியைப் போல் இப்போதும் ஒரு நெருக்கடி உருவாகியுள்ளது.
2015 அகதிகள் நெருக்கடி
2015 -16ஆம் ஆண்டுகளில் சிரியாவிலிருந்து வந்த அகதிகள் எண்ணிக்கையைவிட தற்போது உக்ரைனிலிருந்து ஜேர்மனிக்கு வந்துள்ள அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள விடயம், ஜேர்மன் அரசியல்வாதிகளை கவலையடையவைத்துள்ளது.
கடந்த ஆண்டில், சுமார் 1.1 மில்லியன் உக்ரைனியர்கள் ஜேர்மனிக்கு வந்துள்ளார்கள். அவர்களில் சிலர் நாடு திரும்பிவிட்டாலும், தற்போது 962,000 உக்ரைனியர்கள் ஜேர்மனியில் இருக்கிறார்கள்.
2014க்கும் 2016க்கும் இடையில், சிரியா, ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கிலிருந்து வந்தவர்களின் மொத்த எண்ணிக்கையே 834,000தான்.
மேலும், கடந்த ஆண்டில் மட்டும் 218,000 பேர் ஜேர்மனியில் புகலிடம் கோரி விண்ணப்பித்திருக்கிறார்கள்.
அமைச்சர்கள் எச்சரிக்கை
ஆக, ஜேர்மனி இத்தனை உக்ரைனியர்களுக்கு இடமளித்துள்ள நிலையில், மேலும் பல நாடுகளிலிருந்தும் மக்கள் வருவதை நாம் பார்க்கிறோம் என்று Hamburg மாகாண உள்துறை அமைச்சரான Andy Grote கூறியுள்ளார்.
Hesse பகுதி உள்துறை அமைச்சரான Peter Beuth கூறும்போது, நாட்டு மக்கள் இந்த எண்ணிக்கையால் கவலையடைந்துள்ளார்கள் என்று கூறியதுடன், அரசு புலம்பெயர்வோர் எண்ணிக்கையை குறைக்க, புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களை நாடுகடத்துவதை வேகப்படுத்தவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.