பரம்பரை சொத்தான அரண்மனையை ஒரு யூரோவுக்கு விற்பனை செய்த இளவரசர்: நீதிமன்றம் நாடிய தந்தை
ஜேர்மனியில் பரம்பரை சொத்தான அரண்மனையை ஒரு யூரோ தொகைக்கு அரசாங்கத்திற்கு விற்பனை செய்த மகனுக்கு எதிராக ஹனோவர் இளவரசர் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
பிரித்தானிய ராணியாரின் தூரத்து சொந்தமான 66 வயது ஹனோவர் இளவரசர், கடந்த 2000 ஆண்டில் மரியன்பர்க் அரண்மனை மற்றும் அதனைச் சுற்றியுள்ள காலன்பர்க் எஸ்டேட் ஆகியவற்றை தமது 37 வயது மகனான ஏர்ன்ஸ்ட் ஆகஸ்ட் என்பவர் பெயரில் எழுதி வைத்துள்ளார்.
இதனையடுத்து பராமரிப்பின்றி, கைவிடப்பட்ட நிலையில் இருந்த மரியன்பர் அரண்மனையை 2018-ல் அரசாங்கத்திற்கு வெறும் அடையாளத் தொகைக்கு விற்பதாக ஏர்ன்ஸ்ட் ஆகஸ்ட் அறிவித்துள்ளார்.
தற்போது அந்த அரண்மனையானது புதுப்பித்தல் நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதுடன், மொத்தம் 23 மில்லியன் பவுண்டுகள் அதற்கு தேவைப்படும் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.
உண்மையில் தமது முடிவு வரலாற்று சிறப்பு மிக்க திருப்பம் என குறிப்பிட்டுள்ள ஏர்ன்ஸ்ட் ஆகஸ்ட், இதனால் கோதிக் கட்டிடக்கலையின் உச்சமான இந்த அரண்மனையை பொதுமக்களுக்காக பாதுகாக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரண்மனையை புதுப்பிக்கும் பொருட்டு முதற்கட்டமாக 12 மில்லியன் பவுண்டுகள் தொகையை அனுமதித்து, ஜேர்மன் நாடாளுமன்றம் வாக்களித்துள்ளது.
அரண்மனையில் வைக்கப்பட்டிருந்த 100 ஓவியங்கள் மற்றும் கலைப்பொருட்கள் அனைத்தும் தற்போது ஹனோவர் அருங்காட்சியகத்திற்கு கையளிக்கப்பட்டுள்ளது.
ஆனால் தற்போது இந்த விவகாரம் தொடர்பில் நீதிமன்றத்தை நாடியுள்ள ஹனோவர் இளவரசர், தமது மகன் விற்பனை செய்துள்ளதாக கூறப்படும் சொத்துக்களை தம்மிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
மேலும் தமது மகன், அவருக்கிருக்கும் உரிமைகள், சட்டப்பூர்வமாக வழங்கப்பட்டுள்ள உரிமைகள் மற்றும் குடும்ப நலன்களை கடுமையாக மீறியதாக குற்றம் சாட்டியுள்ளார்.
ஆனால் தமது தந்தையின் கூற்றுக்கள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றவை என்றும் அவை தள்ளுபடி செய்யப்படும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் ஏர்ன்ஸ்ட் ஆகஸ்ட் தெரிவித்துள்ளார்.