ஜேர்மன் சேன்ஸலரின் கருத்தால் நாட்டில் ஏற்பட்டுள்ள குழப்பம்: மருத்துவர் விடுத்துள்ள கோரிக்கை
தனக்கு அதிக வயதாகிவிட்டதால், தான் ஆக்ஸ்போர்டு ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி போட்டுக்கொள்ளப்போவதில்லை என ஜேர்மன் சேன்ஸலரான ஏஞ்சலா மெர்க்கல் கூறிய விடயம் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜேர்மன் அரசின் ஒழுங்குமுறை விதிமுறைகளின்படி, 65 வயதுக்கு கீழுள்ளவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி வழங்கப்படும் என்ற கட்டுப்பாடு ஜேர்மனியில் உள்ளது. ஆகவே, தனக்கு 66 வயதாகிவிட்டதால், ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி போட தான் தகுதியானவள் அல்ல என்றும், ஆகவே தான் தடுப்பூசி போட்டுக்கொள்ளப்போவதில்லை என்று கூறியிருந்தார் மெர்க்கல்.
ஏற்கனவே, ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி வயதானவர்களுக்கு செலுத்தப்படும்போது வெறும் 8 சதவிகிதம் மட்டுமே செயல் திறன் உடையதாக இருப்பதாக கூறி அதன் செயல்திறன் குறித்து அதிகாரிகள் சந்தேகம் எழுப்பியிருந்த நிலையில், மெர்க்கல் தானும் தடுப்பூசி போட்டுக்கொள்ளப்போவதில்லை என்று கூற, மேலும் குழப்பம் ஏற்பட்டது.
இந்நிலையில், ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி அனைத்து வயதினருக்கும் ஏற்றது என்று கூறியுள்ள ஜேர்மன் நோய் எதிர்ப்பியல் துறையின் செகரட்டரி ஜெனரல் என்னும் பெரும் பொறுப்பிலிருக்கும் மருத்துவரான Carsten Watzl, ஸ்காட்லாந்திலிருந்து சமீபத்தில் பெறப்பெற்ற தரவுகள் மூலம், ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவது தெளிவாக தெரியவந்துள்ளதாகவும், அதனால் முதியோர்களும் பாதுகாக்கப்படுவதும் தெரியவந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆகவே, சேன்ஸலர் மெர்க்கலும் ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசியை போட்டுக்கொள்ளலாம் என்று கூறியுள்ள Watzl, அதுவும், அவர் நேரலை தொலைக்காட்சியில் தடுப்பூசி போட்டுக்கொள்வாரானால் மற்றவர்களுக்கும் அது முன்மாதிரியாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.