12 நாள் போர்... உருக்குலைந்த இஸ்ரேல் நகரங்கள்: பார்வையிட்ட ஜேர்மன் உள்விவகார அமைச்சர்
டெல் அவிவ் அருகே ஈரானிய ஏவுகணைத் தாக்குதல் நடந்த இடத்திற்கு விஜயம் செய்த ஜேர்மன் உள்விவகார அமைச்சர் அலெக்சாண்டர் டோப்ரின்ட் இஸ்ரேலுக்கு முழுமையான ஆதரவைத் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலுக்கு ஆதரவு
ஈரானுடனான 12 நாள் போரில் இஸ்ரேலில் பல நகரங்கள் உருக்குலைந்து போனது. 12 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான சேதம் ஏற்பட்டதாக முதற்கட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், ஜேர்மன் உள்விவகார அமைச்சர் அலெக்சாண்டர் டோப்ரின்ட் இஸ்ரேலுக்கு விஜயம் செய்துள்ளார். ஈரான் - இஸ்ரேல் இடையேயான போருக்குப் பிறகு ஒரு மூத்த வெளிநாட்டு அதிகாரியின் முதல் வருகை இதுவாகும்.
உருக்குலைந்து போன இஸ்ரேல் பகுதிகளை பார்வையிட்டுள்ள அவர் இஸ்ரேலுக்கு முழுமையான ஆதரவை அளிக்க வேண்டும் என்றார். ஜூன் 13 அன்று இஸ்ரேல் ஈரானுக்கு எதிராக குண்டுவீச்சு தாக்குதலைத் தொடங்கியது, ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்குவதைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டது இதுவென்றும் கூறியது.
ஆனால் அணு ஆயுதங்களை உருவாக்கும் திட்டம் தங்களிடம் எப்போதும் இருந்ததில்லை என்றே ஈரான் கூறி வருகிறது. இதனிடையே, இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் கிடியோன் சார், ஜேர்மன் அமைச்சரின் வருகையை ஒற்றுமையின் ஒரு செயல் என குறிப்பிட்டுள்ளார்.
சேதத்தின் உண்மையான அளவு
அத்துடன் சர்வதேச சமூகம் ஈரான் மீது தடைகளை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். முன்னதாக ஜூன் 17 அன்று கனடாவில் நடந்த G7 உச்சிமாநாட்டின் இடையே ஜேர்மன் சேன்ஸலர் பிரெட்ரிக் மெர்ஸ் தெரிவிக்கையில்,
ஈரானின் அணுசக்தி உள்கட்டமைப்பை குறிவைத்து இஸ்ரேல் நம் அனைவருக்குமான மோசமான வேலையை செய்து கொண்டிருக்கிறது என்றார். ஈரானுடனான 12 நாள் போரின் போது 50க்கும் மேற்பட்ட ஏவுகணைகளால் தாக்கப்பட்டதாக இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது.
ஆனால் கடுமையான ஊடகக் கட்டுப்பாடுகள் காரணமாக சேதத்தின் உண்மையான அளவு ஒருபோதும் அறியப்படாமல் போகலாம் என்றே கூறப்படுகிறது.
ஈரானில், இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது 627 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும் கிட்டத்தட்ட 4,900 பேர் காயமடைந்துள்ளதாகவும் உத்தியோகப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |