ஜேர்மானிய ஆண்கள் பெண்களை மதிப்பதில்லையா! அதிர்ச்சி தரும் புதிய ஆய்வறிக்கை
ஜேர்மனியில் ஆண்களில் மூன்றில் ஒரு பங்கிற்கு மேல் பெண்கள் மீதான வன்முறையை ஏற்றுக்கொள்வதாகவே தெரிவித்துள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பெண்கள் மீது வன்முறை
ஜேர்மனியில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வு ஒன்றில் கலந்துகொண்ட 18 முதல் 35 வயதுடைய ஆண்களில் 33 சதவீதம் பேர்கள், தங்கள் துணைகள் மீதான வன்முறையை ஏற்றுக்கொண்டுள்ளனர்.
வாக்குவாதத்தின் போது அவர்கள் மீது கை நீட்டுவது இயல்பான ஒன்று என குறிப்பிட்டுள்ளனர். குறித்த ஆய்வானது ஃபன்கே செய்தித்தாள் குழுவால் திங்கள்கிழமை வெளியிடப்பட உள்ளது.
34 சதவீத ஆண்கள், முன்னர் தாங்கள் பெண்கள் மீது வன்முறையில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டுள்ளனர். ஆனால் பாலின சமத்துவம் தொடர்பில் ஆதரவு திரட்டி வரும் குழு ஒன்றின் நிர்வாகி ஒருவர் தெரிவிக்கையில், இந்த ஆய்வறிக்கை உண்மையில் அதிர்ச்சியை அளிப்பதாக உள்ளது என்றார்.
மேலும், ஆய்வில் கலந்துகொண்ட ஆண்களில் மூன்றில் ஒரு பகுதியினர் பெண்களுக்கு எதிரான உடல் ரீதியான வன்முறையை அற்பமானதாகக் கருதுவது சிக்கலானது எனவும், இது விரைந்து மாற்றப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மணிக்கு 13 பெண்கள்
நாடு முழுவதும் 18ல் இருந்து 35 வயதுடைய 1,000 ஆண்கள் மற்றும் 1,000 பெண்களிடம் முன்னெடுக்கப்பட்ட ஆய்வறிக்கையே திங்களன்று வெளியிடப்பட உள்ளது.
இதில் 52 சதவீத ஆண்கள் தெரிவிக்கையில், தங்களது முதன்மையான பணி வருவாய் ஈட்டுதல் எனவும், அதைக் கொண்டே தங்கள் துணை குடும்பத்தை வழிநடத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
இதனிடையே, பொதுவெளியில் தன்பாலின ஈர்ப்பாளர்கள் தங்கள் விருப்பத்தை வெளிக்காட்டுவதை 48 சதவீதம் பேர்கள் விரும்பவில்லை என குறிப்பிட்டுள்ளனர். ஜேர்மனியை பொறுத்தமட்டில் 2021ல் மட்டும் 115,000 பெண்கள் தங்கள் துணையால் உடல் ரீதியான வன்முறைக்கு இலக்கானதாக பொலிசார் வெளியிட்ட தரவுகளில் தெரியவந்துள்ளது.
அதாவது மணிக்கு 13 பெண்கள் தங்கள் துணையால் வன்முறைக்கு இலக்காகியுள்ளனர். மேலும், 2021ல் மொத்தமாக 301 பெண்கள் தங்கள் முன்னாள் அல்லது தற்போதைய துணையால் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.