ஜேர்மனியில் மீண்டும் வரலாறு காணாத அளவை எட்டிய கொரோனா தொற்று: 24 மணி நேரத்தில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள் தெரியுமா?
ஜேர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் 65,000 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதற்கு முன் ஒரே நாளில் 50,000 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட விடயம் வரலாற்று முக்கியத்துவம் பெற்ற நிகழ்வு என கருதப்பட்ட நிலையில், இன்றைய நிலவரப்படி, ஒரே நாளில் 65,000 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் இது பதிவான எண்ணிக்கை மட்டுமே என்பதால், உண்மையான கொரோனா தொற்று எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கலாம் என Robert Koch நிறுவனத்தின் தலைவரான Lothar Wielerதெரிவித்துள்ளார்.
பதிவான எண்ணிக்கையை விட உண்மையான எண்ணிக்கை உண்மையில் இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிகம் இருக்கலாம் என்று கூறியுள்ள Wieler, உண்மையான எண்ணிக்கையை குறைத்து பதிவிடுதல் அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ளார். நாம் ஒரு அவசர நிலையில் இருக்கிறோம் என்று கூறியுள்ள Wieler, இதை கவனிக்கத் தவறுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் பெரிய தவறைச் செய்கிறார்கள் என்று கூறியுள்ளார்.
வரும் நாட்கள் மேலும் மோசமாக இருக்கலாம் என்று கணிக்கும் Wieler, புதிய கொரோனா தொற்றுக்களை தவிர்க்க, அரசியல் தலைவர்கள் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இப்போதே நாம் சரியான நடவடிக்கைகள் எடுக்கவில்லையென்றால், கிறிஸ்துமஸ் காலகட்டம் நிச்சயம் மிக மோசமானதாக இருக்கும் என எச்சரிக்கிறார் அவர்.
சந்தித்துக்கொள்வோர் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துதல், மதுபான விடுதிகளை மூடுதல், மற்றும் 2G விதிகளை நாடு முழுதும் அறிமுகம் செய்தல் என, சுருங்கச் சொன்னால், தடுப்பூசி பெற்றோர் மற்றும் கொரோனாவிலிருந்து விடுபட்டோர் மட்டுமே உணவகங்கள் முதலான இடங்களுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்பது போன்ற ஒரு விதிமுறை கொண்டுவரப்படவேண்டும் என்கிறார் அவர்.