உயிர் காக்கும் கருவியின் சத்தம் தொந்தரவாக இருந்ததால் நோயாளி செய்த பயங்கர செயல்
ஜேர்மனியில், தன் சக நோயாளிக்குப் பொருத்தப்பட்டிருந்த வென்டிலேட்டரிலிருந்து வரும் சத்தம் தொந்தரவாக இருந்ததால் நோயாளி ஒருவர் செய்த செயல் அவரை சிறைக்கு அனுப்பியுள்ளது.
வென்டிலேட்டரிலிருந்து வரும் சத்தம்
ஜேர்மனியின் Mannheim நகரிலுள்ள ஒரு மருத்துவமனையில் ஒரு 72 வயது பெண் அனுமதிக்கப்பட்டிருந்திருக்கிறார்.
அப்போது, மற்றொரு நோயாளிக்கு பொருத்தப்பட்டிருந்த வென்டிலேட்டரிலிருந்து வரும் சத்தம் தொந்தரவாக இருந்ததால் அதன் இயக்கத்தை நிறுத்தியிருக்கிறார் அந்த பெண்.
செவ்வாய்க்கிழமை, மாலை 8.00 மணிக்கு இந்த சம்பவம் நடக்க, உடனடியாக மருத்துவமனை ஊழியர்கள், அந்த கருவி அந்த நோயாளியின் உயிரைக் காப்பாற்றுவதற்கு அத்தியாவசியமான ஒன்று என்று அந்த பெண்ணிடம் கூறி மீண்டும் அதை இயங்கச் செய்திருக்கிறார்கள்.
9.00 மணிக்கு, மீண்டும் அந்த கருவியின் இயக்கத்தை நிறுத்தியிருக்கிறார் அந்தப் பெண்.
சிறைக்கு அனுப்பிய அதிகாரிகள்
இந்தப் பெண், அந்த நோயாளியின் வென்டிலேட்டரின் இயக்கத்தை நிறுத்தியதால், அவருக்கு உயிர் காக்கும் சிகிச்சை அளிக்கவேண்டிய நிலை உருவாகியிருக்கிறது. இப்போது அவரது உயிருக்கு ஆபத்து இல்லை என்றாலும், அவர் தொடர்ந்து தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்படவேண்டிய நிலைமை உருவாகியுள்ளது.
ஆகவே, அந்த 72 வயது பெண்ணை கைது செய்த பொலிசார், அவரை நீதிபதி ஒருவர் முன் ஆஜர் செய்துள்ளார்கள். கொலைமுயற்சியில் ஈடுபட்டதாக சந்தேகத்தின்பேரில் அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.