பாம்புகளை கவனிக்கும் பொறுப்பை ஏற்ற புலம்பெயர்ந்த இளைஞன்! நள்ளிரவில் நடந்தது என்ன? பகீர் சம்பவம்
மலேசியாவில் சென்று வேலை பார்த்த கானா நாட்டை சேர்ந்த இளைஞன் பாம்பு கடித்ததில் உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பாக மலேசியாவில் உள்ள கானா நாட்டு சங்கத்தின் தலைவர் சாமுவேல் அடு கூறுகையில், சீன - மலேசியர் ஒருவர் தனது வீட்டில் பாம்புகளை செல்லப்பிராணியாக வளர்த்து வந்திருக்கிறார்.
பல்வேறு விதமான பாம்புகள் அவரிடம் இருந்தன, இந்த பாம்புகளை கவனித்து கொள்ளும் பணியில் கானாவை சேர்ந்த ஆண்ட்ரூஸ் இருந்த போது அவரை பாம்பு கடித்ததாக அவரின் முதலாளி என்னிடம் கூறினார்.
இதையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ஆண்ட்ரூஸ் சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பியதாகவும், நடுராத்திரியில் உடல்நிலை மோசமாகி சுயநினைவை இழந்தார் எனவும் இதன்பிறகு ஆண்ட்ரூஸ் இறந்துவிட்டதாகவும் எங்களிடம் அவரின் முதலாளி கூறினார்.
இதற்காக $4500 நஷ்ட ஈடு கொடுப்பதாகவும், நஞ்சுமுறிவு மருந்துகளை வைத்து கொள்ளாமல் ஆண்ட்ரூஸை பாம்புகள் நடுவே விட்டது தனது தவறு எனவும் தெரிவித்ததாக சாமுவேல் கூறியுள்ளார்.
மேலும், அந்த நபர் ஆண்ட்ரூஸ் விடயத்தில் எதையோ மறைப்பது போல உள்ளது எனவும் இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடக்கவுள்ளது எனவும் சாமுவேல் தெரிவித்துள்ளார்.