தி ஹண்ட்ரட் தொடர்... முக்கிய வீரர்கள் விலகல்
இங்கிலாந்தில் நடைபெறவுள்ள தி ஹன்ட்ரட் போட்டியிலிருந்து அவுஸ்திரேலிய வீரர்கள் வார்னர், ஸ்டாய்னிஸ் ஆகியோருக்கு அடுத்ததாக மேக்ஸ்வெல்லும் விலகியுள்ளார்.
100 பந்துகள் கொண்ட தி ஹன்ட்ரட் கிரிக்கெட் போட்டியை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிமுகம் செய்கிறது.
இந்த 100 பந்துகள் ஆட்டத்தில் வழக்கமான 6 பந்துகள் கொண்ட 15 ஓவர்களும் 10 பந்துகள் கொண்ட ஒரு ஓவரும் வீசப்படும்.
இதனால் டி20 போட்டிகளான ஐபிஎல், பிக் பாஷ், கரீபியன் பிரீமியர் லீக் ஆகியவற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும்.
ஆடவர், மகளிர் என இரு தரப்பினருக்கும் நடத்தப்படும் இந்தப் போட்டியில் தலா 8 அணிகள் கலந்துகொள்ளவுள்ளன. 100 பந்துகள் கொண்ட இப்போட்டியைக் கடந்த வருடம் ஜூலை மாதம் அறிமுகம் செய்வதாகத் திட்டமிடப்பட்டிருந்தது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இப்போட்டி ஒத்திவைக்கப்பட்டது. இந்த வருட தி ஹன்ட்ரட் போட்டி, ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21 வரை நடைபெறவுள்ளது.
சதர்ன் பிரேவ் அணிக்குத் தெரிவான அவுஸ்திரேலிய வீரர்கள் டேவிட் வார்னர், ஸ்டாய்னிஸ் ஆகியோர் தி ஹன்ட்ரட் போட்டியிலிருந்து விலகினார்கள்.
இதையடுத்து மற்றொரு பிரபல அவுஸ்திரேலிய வீரரான மேக்ஸ்வெல்லும் விலகியுள்ளார். அவர், லண்டன் ஸ்பிரிட் அணியில் இடம்பெற்றிருந்தார்.
இத்தகவலை அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஷேன் வார்னே தெரிவித்துள்ளார். மேக்ஸ்வெலுக்குப் பதிலாக மேற்கு அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜோஷ் இங்க்லிஷ், லண்டன் ஸ்பிரிட் அணியில் இடம்பெற்றுள்ளார்.