அச்சமூட்டும் வேகத்தில் குறைந்து வரும் உலக எண்ணெய் இருப்பு... நெருக்கடியில் பல நாடுகள்
இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகள் காரணமாக ஈரானால் முடக்கப்பட்டுள்ள ஹார்முஸ் நீரிணையால், ஒட்டுமொத்த உலகிற்கும் சிரமங்கள் ஏற்பட்டுள்ளது.
98 நாட்களாகக் குறையும்
தற்போது, உலகளாவிய எண்ணெய் கையிருப்பு கடந்த எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்த மட்டத்தை எட்டியுள்ளதாக அஞ்சப்படுகிறது.

Goldman Sachs சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிப்ரவரி மாதத்தில் உலகளவில் 105 நாட்களுக்குப் போதுமான எண்ணெய் கையிருப்பு இருந்த நிலையில், அது தற்போது 101 நாட்களாகக் குறைந்துள்ளதுடன், மே மாத இறுதிக்குள் 98 நாட்களாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது என குறிப்பிட்டுள்ளது.
பிப்ரவரி மாத இறுதி முதல், அதாவது ஈரானில் போர் தொடங்கியதிலிருந்து, உலகெங்கிலும் உள்ள கையிருப்புகளில் இருந்து 100 கோடிக்கும் அதிகமான பீப்பாய் எண்ணெய் பயன்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது, உலக அளவில் தினமும் 10 முதல் 13 மில்லியன் பீப்பாய் எண்ணெய்க்குத் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை, அந்நாட்டின் உத்திசார் பெட்ரோலிய இருப்பில் (SPR) தற்போது 3.37 மில்லியன் டன் கச்சா எண்ணெய் மட்டுமே எஞ்சியுள்ளது.
கையிருப்பில் ஏற்பட்ட கடுமையான சரிவு, அரசாங்கத்தையும் எரிசக்தி சந்தையையும் கவலைக்குள்ளாக்கியுள்ளது. ஹார்முஸ் நீரிணைக் கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக கப்பல் போக்குவரத்திற்கு மூடப்பட்டிருப்பதால், இதுவரை ஒரு பில்லியன் பீப்பாய்களுக்கும் அதிகமான விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

தற்போது, இன்னும் சில நாட்களுக்கு இது மூடப்பட்டிருந்தால், நிலைமை மிக மோசமான கட்டத்தை எட்டக்கூடும். Bloomberg வெளியிட்டுள்ள தகவல்களின் அடிப்படையில், நிபுணர்களும், IEA மற்றும் IMF போன்ற சர்வதேச அமைப்புகளும் கடுமையான எச்சரிக்கைகளை விடுத்துள்ளன.
பன்மடங்கு அதிகரிக்கக்கூடும்
செப்டம்பர் மாதம் வரை ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டிருந்தால், கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 167 டொலர் முதல் 200 டொலர் வரை உயரக்கூடும் என்று கூறப்படுகிறது.
எரிபொருள் பற்றாக்குறை மற்றும் விலை உயர்வால், உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 3.5 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் இழக்கக்கூடும். உரம் தயாரிப்பதில் எரிவாயு பயன்படுத்தப்படுவதால், இது அடுத்த 6-7 மாதங்களில் உணவு நெருக்கடியையும் ஏற்படுத்தக்கூடும்.

இது தவிர, கப்பல் காப்பீடு மற்றும் சரக்குக் கட்டணமும் பன்மடங்கு அதிகரிக்கக்கூடும். இந்தியா தனது தேவையின் 88 சதவீத எண்ணெயையும் 80 சதவீத எல்பிஜி-யையும் இறக்குமதி செய்கிறது.
விநியோக முடக்கத்தின் காரணமாக இந்தியாவில் கடுமையான எரிபொருள் பற்றாக்குறை மற்றும் பணவீக்கம் ஏற்படும் அபாயம் உள்ளது. மட்டுமின்றி, சீனா, ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளும் தங்களின் எரிசக்தித் தேவைகளுக்காக வளைகுடா நாடுகளை முழுமையாகச் சார்ந்துள்ளன. வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானும் மிக மோசமான நெருக்கடியை எதிர்கொள்ள இருக்கிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |