நாட்டைக் கைப்பற்ற சதி... 40 ராணுவ அதிகாரிகள் கொத்தாக கைது
சூடான் அரசைக் கைப்பற்ற அந்த நாட்டின் ராணுவத்தின் ஒரு பிரிவினர் கிளர்ச்சியில் ஈடுபட்ட நிலையில், தொடர்புடைய 40 அதிகாரிகளையும் கைது செய்து சதி முறியடிக்கப்பட்டுள்ளது.
ஆபிரிக்க கண்டத்தின் வட பகுதியில் அமைந்துள்ள சூடான் நாட்டில் தற்போது இடைக்கால அரசு ஆட்சியில் உள்ளது. இந்த அரசின் பிரதமராக அப்தல்லா ஹாம்டாக் பொறுப்பு வகித்து வருகிறார்.
1989 முதல் 2019 வரை நீண்ட காலமாகவே ஒமர் அல் பஷீர் சூடான் நாட்டின் ஜனாதிபதியாக இருந்தார். அவர் ஆட்சியின் மீது மக்கள் அதிருப்தி கொள்ள ராணுவத் துணையுடன் மக்கள் ஜனாதிபதியை ஆட்சியில் இருந்து அப்புறப்படுத்தினர்.
பின்னர் அமைந்த இடைக்கால அரசின் பிரதமரானார் அப்தல்லா ஹாம்டாக். இந்த நிலையில், அண்மைக்காலமாகவே இடைக்கால ஆட்சிக்கு எதிராக ராணுவத்தில் ஒரு பிரிவினர் செயல்படத் தொடங்கினர். இவர்கள் அவ்வப்போது ஆட்சிக் கவிழ்ப்பு சதியில் ஈடுபட்டும் வந்துள்ளனர்.
அப்படியொரு முயற்சி திடீரென்று முன்னெடுக்கப்பட்ட நிலையில் அதனை சூடான் அரசு துரிதமாக செயல்பட்டு தடுத்துள்ளது. இது குறித்து ரஷ்ய செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில்,
சூடான் நாட்டு நாடாளுமன்றத்தை நோக்கி ராணுவத்தின் ஒரு பிரிவினர் படையெடுக்க, ராணுவமே டாங்குகளை சாலைகளின் குறுக்கே நிறுத்தித் தடுத்தது. குறிப்பிட்ட அந்த 40 பேரும் நீண்ட காலமாகவே ராணுவத் தலைமையகத்தின் தீவிர கண்காணிப்பில் இருந்துள்ளனர்.
இந்நிலையில், இன்று அவர்கள் கிளர்ச்சியில் ஈடுபட முயன்றபோது ராணுவத் தலைமையகத்தால் தடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கிளர்ச்சியின் பின்னணியில் முன்னாள் ஜனாதிபதி ஒமர் அல் பஷீர் இருப்பதாக ஆளுங்கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.