மருத்துவமனை படுக்கைக்காக சிறுநீரகம்... மயானங்களில் இடம் இல்லை: வீட்டுத் தோட்டங்களில் புதைக்கும் மக்கள்
தென் அமெரிக்க நாடான பெருவில் மருத்துவமனைகளில் மட்டுமல்ல மயானங்களிலும் இடம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள சம்பவம் அங்குள்ள மக்களை தவிக்க வைத்துள்ளது.
மொத்தம் 32 மில்லியன் மக்கள் தொகை கொண்ட பெரு நாட்டில், கொரோனாவுக்கு இதுவரை 64,300 பேர் இறந்துள்ளதாக அரசு ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அந்த எண்ணிக்கை உண்மை இல்லை எனவும், மயானங்களில் இடம் பற்றாக்குறை ஏற்படும் அளவுக்கு நிலைமை மிக மோசமாக இருப்பதால், இறப்பு எண்ணிக்கையும் அதிகமாக வாய்ப்புள்ளதாக சமூக ஆர்வலர்கள் மத்தியில் சந்தேகம் எழுந்தது.
இந்த நிலையில் இதுவரையான இறப்பு எண்ணிக்கை 175,000 என இருக்க வாய்ப்புள்ளதாக அரசு வட்டாரத்தில் இருந்தே தகவல் வெளியாகியுள்ளது.
மட்டுமின்றி மொத்தமுள்ள 2,785 தீவிர சிகிச்சை படுக்கைகளில் ஒன்றைப் பெற, கார், நிலம் அல்லது சிறுநீரகத்தையே அளிக்க மக்கள் முன்வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இருப்பினும் பல உயிர்கள் காப்பாற்ற முடியாமல் பறிபோகும் சூழ்நிலை, குடும்பங்களை கவலையில் ஆழ்த்தி வருகிறது. மயானங்களில் இடம் கண்டுபிடித்தாலும், அதற்கான செலவுகளை ஏற்கும் பொருளாதார சூழலில் மக்கள் தற்போது இல்லை.
சுமார் ஆயிரம் யூரோ வரையில் செலவாகும் நிலை உள்ளது. இந்த தொகையானது பெரு மக்களின் குறைந்தபட்ச மாத வருவாயின் ஐந்து மடங்காகும்.
விமரிசையாக நல்லடக்கம் செய்த காலகட்டம் அல்ல இப்போது என தெரிவித்துள்ள மக்கள், மயானத்தின் ஏதேனும் ஒரு மூலையில் இடம் கிடைத்தால் போதும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
தலைநகர் லிமாவில் மொத்தமுள்ள 65 மயானங்களில் 20 மட்டுமே சுகாதாரத்துறையின் அத்தாட்சியுடன் செயல்படுகிறது. பல மயானங்களில் தடுப்பு வேலி அல்லது சுற்றுச்சுவர் இல்லாமல் திறந்தவெளியாகவே காட்சி அளிக்கின்றன.
மட்டுமின்றி, பராமரிப்பு இல்லாமல், பல மயானங்கள் பயன்பாட்டில் இல்லாமலும் இருந்து வந்துள்ளது.
ஆனால் தற்போது கொரோனா இறப்புகள் அதிகரித்துள்ள சூழலில், இடம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.