தாய் கொல்லப்பட்டது தெரியாமல் அவரை எழுப்ப முயன்ற குழந்தை... புகைப்படம் வெளியானது
கிரீஸ் நாட்டில் வாழ்ந்துவந்த பிரித்தானிய பெண் கொள்ளையர்களால் கழுத்து நெறிக்கப்பட்டு கொல்லப்பட்ட நிலையில், தாய் இறந்தது தெரியாமல் அந்த பெண்ணின் குழந்தை அவரை தட்டி எழுப்ப முயன்ற காட்சியைத் தாங்கள் கண்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
ஏதென்சில் வாழ்ந்து வந்த பாபிஸ் (Babis) என்னும் Charalambos Anagnostopoulos (33), தன் மனைவி கரோலின் (Caroline Crouch, 20) மற்றும் தனது 11 மாத பெண் குழந்தை லிடியாவுடன் தன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது, முகமூடி அணிந்த கொள்ளையர்கள் சிலர் வீட்டுக்குள் நுழைந்துள்ளனர்.
பாபிஸை கைகளையும் கண்ணையும் கட்டி, வாயில் டேப் ஒட்டி தரையில் வீசிவிட்டு, அவரது மனைவி கரோலினின் கைகளை பின்புறமாக கட்டிப்போட்டுவிட்டு, அவரிடம் பணம் எங்கே இருக்கிறது என்று கேட்டு மிரட்ட, தன் மனைவியையும் மகளையும் கொள்ளையர்கள் எதுவும் செய்துவிடக்கூடாது என்று அஞ்சி, பணம் இருக்கும் இடத்தை சொல்லிவிட்டிருக்கிறார் பாபிஸ்.
ஆனால், அந்த பணத்தை எடுத்தபிறகும், மேலும் பணம் இருக்கிறதா என்று கேட்டு கரோலினை சுமார் ஒரு மணி நேரம் சித்திரவதை செய்த அந்த கொள்ளையர்கள், 11 மாதக் குழந்தையான லிடியாவின் நெற்றிப்பொட்டில் துப்பாக்கியை வைத்து மிரட்ட, குழந்தையை விட்டு விடுமாறு அலறி சத்தம் போட்டிருக்கிறார் கரோலின். சற்று நேரத்தில் வீடே அமைதியாகிவிட, தனது போனில் தான் கடைசியாக அழைத்த எண்ணை தன் மூக்கால் அழுத்தியிருகிறார் பாபிஸ். அந்த எண் அவர்களுடைய பக்கத்து வீட்டில் வாழும் பெண்ணுடையது.
வாயில் டேப் ஒட்டப்பட்டிருந்ததால் பாபிஸ் என்ன சொல்கிறார் என்பது புரியாமல் நேரே அவரது வீட்டுக்கு வந்தபோதுதான் பிரச்சினை புரிந்து பொலிசாரை அழைத்திருக்கிறார் அந்த பெண்.
பொலிசார் வந்து பார்க்கும்போது தரையில் கண்களும் கைகளும் கட்டப்பட்ட நிலையில் கிடந்திருக்கிறார் பாபிஸ். கரோலின் வெளிறிப்போய் கைகள் பின்னல் கட்டப்பட்ட நிலையில் கட்டிலில் கிடந்திருக்கிறார்.
அப்போது, குழந்தை லிடியா, தன் தாய் இறந்தது தெரியாமல், அவரை தட்டியும் கத்தியும் எழுப்ப முயன்ற காட்சியைத் தான் கண்டதாக தெரிவிக்கிறார் ஒரு குழந்தைக்கு தந்தையான Christos என்னும் பொலிசார்.
பொலிசார் தன் கண் கட்டை அவிழ்த்தபோதுதான் பாபிஸுக்கும் தன் மனைவி இறந்துபோன உண்மை தெரிந்திருக்கிறது. மனைவி இறந்ததற்காக அழுவதா, தாய் இறந்தது தெரியாமல் அழும் குழந்தையைத் தேற்றுவதா என தடுமாறி, பிறகு குழந்தையைத் தூக்கிக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறியிருக்கிறார் பாபிஸ். அங்கே, பாபிஸின் தாய் நிற்க, குழந்தையை அவரிடம் ஒப்படைத்துள்ளார் அவர்.
தன் பிள்ளைக்கும், தன் பிள்ளையின் பிள்ளைக்கும் ஆறுதல் கூறமுடியாமல் திகைத்து நிற்கும் அந்த தாய், குழந்தை லிடியாவைத் தூக்கிச்செல்லும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த வழக்கில் இதுவரை குற்றவாளிகள் குறித்து எந்த தகவலும் கிடைக்காத நிலையில், பொலிசார் அவர்களை தீவிரமாக தேடி வருகிறார்கள்.